BLOOD DIAMOND - சினிமா விமர்சனம்



படம் ஆரம்பிக்கும்போதே கதை நடக்கும் இடத்தையும் , அதன் சூழ்நிலையையும் நமக்குக் காட்டிவிடுகிறார்கள் . இருண்டகண்டம் என்றழைக்கப்பட்டதாலோ என்னவோ நம் மக்களுல் பெரும்பாலானோர் நைல் நதி பாயும் எகிப்து மட்டுமே சிறிது வளமான நாடு என்றும் மற்ற நாடுகள் அனைத்தும் கொளுத்தும் வெயிலில் தகிக்கும் சஹாரா பாலைவனமாகவும் மீந்த இடங்கள் அவற்றின் எச்சமாக இருக்கும் என்ற எண்ணத்தில் இருக்கிறார்கள் . ஆனால் உண்மையில் ஆப்ரிக்கா , இயற்கை வளங்களின் சொர்க்கம் . உலகின் மிகமுக்கியமான  விலையுயர்ந்த பலபொருட்களுக்குப் பிறப்பிடம் ஆப்பிரிக்கா தான் . அதனால் தான் என்னவோ அக்கண்டம் காலங்காலமாய் சோகத்தின் விளிம்பில் வாடுகிறது . அந்நாட்டு மக்கள் பிறக்கும்போதே சாவை எதிர்கொள்ளத் துணிகிறார்கள் . காரணம் , காலனி ஆதிக்கம்  மற்றும் ஏகாதிபத்தியம் . நாம் ஷின்ட்லர்ஸ் லிஸ்ட் பதிவில் பார்த்த ஏகாதிபத்தியத்தை ஒருமுறை நினைவிற்கு கொண்டுவாருங்கள் . ஐரோப்பிய நாடுகளின் காலனி ஆதிக்கத்தில் உலகமே ஒருமுறை அடங்கிக்கிடந்திருந்தாலும் , ஐரோப்பியர்களைக் காட்டிலும் அமெரிக்காவின் காலனியில் மாட்டிய நாடுகளின்  நிலை தான் மிகமிக மோசம் என்பது உலகறிந்ததே ! அப்படி மாட்டிய ஒரு நாடான சியர்ரோ லியோன் எனும் ஆப்ரிக்க நாட்டில் நடந்துகொண்டிருக்கும் கொடுமைகளை விளக்குவது தான் இத்திரைப்படம் .

ஒரு அழகான காலைப்பொழுது . மீனவனான சாலமன் வான்டே(டி) தன் மகனை எழுப்பி பள்ளிக்கு கிளப்புகிறான் . அவன் மனைவி கைக்குழந்தையுடன் படுத்துக்கொண்டிருக்கிறாள் . மகனைப் பள்ளிமுடித்து திருப்பி அழைத்து வருகிறான் . தன்னைப்போன்று தன் மகனும் மீனவனாகிவிடக்கூடாது என்ற நடுத்தரவர்க்கத்துமக்களின் நியாயமான ஆசை அவனுக்குள் இருப்பது ஆச்சரியமன்று . திடீரென மூன்று ஜீப்களில் கையில் துப்பாக்கியும் பெரிய ரேடியோவில் பாப் பாடலும் போட்டுக்கொண்டு கும்பல் வருகிறது . சாலமனின் கிராமத்தை நோக்கி நுழையும் ஜீப்களில் இருப்பவர்கள் இறங்கக்கூட நேரத்தை வீண் செய்யாமல் அங்கிருந்தபடியே படபட வென சுட்டுத்தள்ளுகிறார்கள் . சுடுபவர்களில் பலர் சிறுவர் . பத்து வயதுகூட நிரம்பாத சிறுவன் ஒருவன் வெறிபிடித்தபடி சுட்டுவிட்டு சிரிக்கிறான் . சாலமன் தன் குடும்பத்தைத் தப்பிக்க வைக்கிறான் ; ஆனால் அவன் மாட்டிக்கொள்கிறான் . ஊரிலிருப்பவர்களை வரிசையாக நிற்க சொல்லி ஒவ்வொருவரின் கையையும் அந்த கும்பல் வெட்டுகிறது . சாலமனின் முறை வரும்போது அதிர்ஷ்டவசமாக தப்பிக்கிறான் .
மேலே சொல்லும் கும்பலின் பெயர்  RUF . அந்த கும்பல் எதற்காக கையை வெட்டினார்கள் தெரியுமா ? மக்கள் யாரும் ஓட்டு போடக்கூடாதென்பதற்காக. இதுதான் அப்போது அந்நாட்டின் வழக்கம் . 
ஆப்பிரிக்காவில் வைரம் இருப்பதை முதன்முதலில் ஒரு சிறுவன் கண்டுபிடித்ததாக கூறுவர் . நான் அக்கட்டுரையை வாசித்திருந்தாலும் மறந்துவிட்டது . அங்கு வைரம் இருப்பது தெரிந்தபின் அந்நிய நாட்டினர் உட்பட அனைவரின் படையெடுப்பும் ஆப்ரிக்காவை நோக்கியதாகவே இருந்தது . ஆப்பிரிக்க நாடுகளின் ஆட்சியாளர்களுக்கு வெளிநாட்டுநிறுவனங்கள் பலவிதமான அன்பளிப்புகளையும் பணத்தையும் காட்டி ஒவ்வொரு நாட்டையும் விலைக்கு வாங்கின . பின் அந்நாட்டின் வளங்களை ஸ்ட்ராவுக்கு பதில் பெரிய பெரிய மோட்டர் போட்டு உறிஞ்சின . அப்படியொரு நாடுதான் இந்த சியர்ரோ லியோன் . காலனியாதிக்கத்திலிருந்து விடுபட்ட இந்நாட்டை ஆண்ட முதல் ஆட்சியாளரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் ஊழல் பெரும்பன்னிகளாகவும் , பணத்திற்காக பெற்ற தாயையே அவுசாரிகளாக்கும் அளவிற்கு மோசமானவர்களாகவும் இருந்தனர் . ஒருபுறம் கார்ப்பரேட் கொள்ளை , மறுபுறம் ஆட்சியாளர்கள் தொல்லை. என்னசெய்வதென்றே புரியாமல் தவித்த மக்களின் நிலை பரிதாபத்திற்குரியதானது . அரசின் கஜானா , பீடி வாங்கக்கூட முடியாதநிலைக்குள்ளானது . அரசு அதிகாரிகளுக்கே சம்பளம் தரமுடியாத நிலைக்கு போனது . அந்நேரத்தில் மக்களின் நிலை என்னவாக இருந்திருக்கும் என்று யோசித்துப்பாருங்கள் . பொறுத்துப்பார்த்த மக்களின் துணைவனாய் RUF இயக்கம் வந்தது . தங்களின் எதிர்கால சந்ததியினரையாவது மகிழ்ச்சியுடன் வாழவைக்கவேண்டும் என்ற நோக்கில் மக்களும் அதை ஆதரித்தனர் . ஆனால் அவ்வியக்கத்தின் மகிமையும் போகப்போக தெரியவந்தது . புரட்சி இயக்கம் மக்களை வைத்துத் திருட ஆரம்பித்தது . நாட்டிலிருக்கும் வைரங்களை அள்ளி , தங்களை ரட்சிப்பவனாய்க் காட்டிக்கொண்டு , தங்களின் சுகபோகவாழ்வினை மேம்படுத்த முயன்ற ஒரு ஹிப்பிக்கூட்டமாக RUF மாறியது . அவ்வியக்கம் , தன்னை ஆதரிக்காத மக்களை துரோகி என்று கூறி சுட்டது . எல்லாபக்கமும் மக்களுக்கு மரண அடி . இந்தமாதிரியான சூழலில்தான் ஐரோப்பியநாடுகளிலுள்ள நிறுவனங்கள் சியர்ரோ லியோனின் வைரத்தை இனி வாங்கக்கூடாது என்று முடிவெடுத்தன . ஆனால் அது வெளியுலகிற்கு , உள்ளுக்குள்ளே தங்களின் ஏஜென்ட்களை வைத்து RUF –ன் வைரங்களை வாங்கி , சியர்ரோ லியோனின் அண்டை நாடான லிபியா நாட்டிலிருந்து எடுக்கப்பட்ட வைரம் என்றுகூறி வியாபாரத்தைத் தொடர்ந்து நடத்த ஆரம்பித்தன . இந்த வைரங்களைக் கடத்தும் ஏஜென்டாக தான் நம்ம காப்ரியோ இப்படத்தில் வருகிறார் .

சரி கதைக்கு வருவோம் . சாலமன் RUF – விடம் மாட்டியபிறகு வைரத்தைத் தேடும் பணியில் ஈடுபடுத்தப்படுகிறான் . அவ்வாறு அவன் தேடும்போது 100 கேரட் மதிப்புள்ள ஒரு பெரிய பிங்க் வைரம் கிடைக்கிறது . அதை யாருக்கும் தெரியாமல் மறைக்கப்போகும்போது RUF காமென்டரிடம் மாட்டிக்கொள்கிறேன் . அதேநேரம் ராணுவத்தாக்குதல் நடக்க , அங்கிருந்து தப்பித்து ராணுவத்திடம் மாட்டிக்கொள்கிறான் . அதேநேரம் வைரக்கடத்தல் ஏஜென்டான முன்னாள் ராணுவ வீரர் ஆர்ச்சர் , ஒரு கடத்தலில் ஈடுபட்டபோது மாட்டி சிறையில் இருக்கிறான் . படுகாயமடைந்த RUF கமான்டரை , ராணுவம் கைதுசெய்து சிறைக்கு அழைத்துவருகிறது . அந்த கமான்டர் , சாலமனைப் பார்த்து வைரத்தை எங்கு வைத்திருக்கிறாய் என்று சிறையிலேயே கத்த , அந்நேரம் ஆர்ச்சர் அதனை நன்கு கவனிக்கிறான் . ஆர்ச்சருக்கு வைரம் ராணுவத்தில் மாட்டிவிட்டதால் தன் முதலாளியான காலினலிடம் பணம் தரவேண்டிய நிர்பந்தம் இருக்கிறது . பின் சிறையிலிருந்து  வெளிவந்த ஆர்ச்சர் , சாலமனை வெளியில் கொண்டுவருகிறான் . அவனிடம் வைரத்தைப்பற்றி கேட்கிறான் . ஆனால் சாலமன் எதுவும் தெரியாதது போல் இருக்கிறான் . ஒருகட்டத்தில் தொலைந்துபோன அவனது குடும்பத்தை மீட்டுக்கொடுப்பதாக வாக்குறுதி கொடுக்கும் ஆர்ச்சர் , அதற்கான பயணத்தை மேற்கொள்கிறான் . அதேநேரம் ஒரு பாரில்  மேடி எனும் ஜர்னலிஸ்டை சந்திக்கிறான் . அவளுக்கு அவன் ஏஜென்ட் என்பது தெரியவர அவனிடமிருந்து உண்மையை தெரிந்துகொள்ளவேண்டுமென முயற்சிக்கிறாள் . ஆனால் ஆர்ச்சர் உண்மையைக் கூறாமல் சென்றுவிடுகிறான் . இப்போது சாலமனுக்கு உதவ வேண்டுமெனில் ஜர்னலிஸ்டான மேடியின் உதவி தேவைப்படுகிறது . அவளுக்கு வைரக்கடத்தலைப்பற்றிய விஷயங்களை ஆதாரத்துடன் சொல்வதாக ஒப்புக்கொண்டு அதற்கு கைமாறாக சாலமனின் குடும்பத்தைக் கண்டறிய உதவவேண்டுமென்கிறான் . ஒருவழியாக சாலமனின் குடும்பத்தைக் கண்டறிந்தாலும் சாலமனின் மகன் RUF –ல் மாட்டிக்கொண்டான் என்பது தெரியவருகிறது . வைரத்தைத் தேடி சாலமனும் ஆர்ச்சரும் , அவ்வைரத்தைப் பதுக்கிய இடத்திற்கு செல்கிறார்கள் . ஆனால் அவ்விடத்தில் RUF –ன் கேம்ப் இருக்கிறது . உடனே தன் கலினலுக்கு ஆர்ச்சர் இதைப்பற்றித் தெரிவிக்கிறான் . அவர்களும் அங்கு காலை வான்வழித்தாக்குதல் நடத்துவதாக கூறிவிடுகிறார்கள் . ஆனால் இரவில் தான் சாலமனுக்குத் தன் மகன் அங்கு ஒரு இளம்தீவிரவாதியாக இருப்பது தெரியவருகிறது . ஆனால் RUF – ன் கமான்டரிடம் சாலமன் மாட்டிக்கொள்கிறான் . இப்போது சாலமனிடம் வைரத்தை எடுத்துத்தருமாறு கமான்டர் சொல்ல , அதேநேரம் வான்வழி தாக்குதல் நடக்க , அதைத்தொடர்ந்து என்ன ஆனது என்பதனை படத்தினைப் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள் .

படத்தில் பல காட்சிகள் ரசித்துப் பார்க்கும்படியானதாக இருக்கும்ம . அதுவும் வசனம் ; சான்ஸே இல்ல ரகம் . ஆர்ச்சர் காலினலுடன் பேசும்போது சாலமனுக்கு கிடைத்த சிவப்பு வைரத்தைப்பற்றி காலினல் விசாரிப்பார் . அப்போது ஆர்ச்சர் ‘அந்த வைரம் கிடைத்திருந்தால் நான் இந்நேரம் இந்த கண்டத்தில் இருந்திருப்பேனா ’ என்பார் . அப்போது காலினல் ஆர்ச்சரின் கையை நீட்டச்சொல்லி அதில் சிறிது மண்ணை எடுத்துப் போடுவார் . அப்போது அவர் பேசும் வசனத்தை நன்கு கவனியுங்கள் .
Danny, give me your hand.
That's red earth. It's in our skin.
The Shona say the color
comes from all the blood
that's being spilled
fighting over the land.
This is home.
You'll never leave Africa.

இதேபோல் ஆர்ச்சர் பழகும் அந்த பார் ஓனரும் , அடுத்தநாள் RUF வந்து அனைத்தையும் அழித்துவிடும் என்பதை அறிந்தும் இது என்நாடு என்று அங்கேயே அதைப்பற்றி சிறிதும் கவலைப்படாமல் இருப்பார் .

RUF- விடம் மாட்டிய சாலமனின் மகன் டியா வாண்டிக்கு அவர்கள் எப்படியெல்லாம் பேசி மனமாற்றுகிறார்கள் என்பதனையும் முதல்முறை அவன் கையில் துப்பாக்கியைக் கொடுத்து கண்ணைக் கட்டிவிட்டு ஒருவனைக் கொலைசெய்யவைத்து அவன் பிஞ்சுமனதில் நஞ்சுபாய்ச்சுகிறார்கள் என்பதனையும் பார்க்கும்போது மனம் கனக்கும் . சியர்ரோ லீயோனின் தலைநகரான ஃப்ரீ டவுனை RUF கைப்பற்றும் காட்சியில் ஈவிரக்கமே இல்லாமல் ராணுவமும் தீவிரவாதிகளும் அப்பாவிப் பொதுமக்களைச் சுட்டுவீழ்த்தும்போது போரின் கொடுமை என்னவென்று தெரியாதவர்களுக்கு கண்டிப்பாக புரியும் . கைப்பற்றிய பின் புரட்சிகர இயக்கம் என்றழைத்துக்கொள்ளும் RUF படையினர் நடத்தும் வெறியாட்டங்கள் சொல்லிமாளாது . காரில் ராணுவத்தினரைக்கட்டி தெருவில் இழுத்துச்செல்வதும் , தலைகீழாக தொங்கவிட்டு சித்திரவதை செய்யும்போது மனிதநேயமென்றால் கிலோ எவ்வளவு என்பதுபோல் இருக்கும் .

சாலமனுக்காக ஆர்ச்சர் மேடியிடம் உதவிகேட்பான் . அவள் கேட்ட விஷயங்களை சொல்வதாகக்கூறி அவன் கேட்ட உதவியை அவளும் செய்வாள் . சாலமனின் குடும்பத்தைக் கண்டுபிடிப்பதற்காக கிய்னி அகதி முகாமிற்கு செல்வார்கள் . அந்த முகாமை பார்த்து வெறுப்பான மனதுடன் மேடி சொல்லுவாள் . மொத்த நாடும் அகதிகள் முகாமில் இருக்கிறது என்று . உண்மைதான் . அந்த கிய்னி முகாமில் ஏறத்தாழ 10 லட்சத்திற்கும் அதிகமான அகதிகள் வாழ்ந்தார்கள் . தன் மனைவியையும் குழந்தைகளையும் பார்த்த சாலமன் தன் மகனைப்பற்றி கேட்பான் . அவள்  , RUF அவனை இழுத்துச்சென்றதைச் சொல்வாள் . என்னசெய்வதென்று புரியாமல் கதறும் சாலமனை ராணுவத்தினர் வந்து அடிப்பார்கள் . அந்நேரத்தில் ராணுவத்தினர் சாலமனை சுட்டுக்கொல்லக்கூடத் தயாராகுவார்கள் . ஆனால் அதைப்பொருட்படுத்தாத சாலமன் , தன் மகன் RUF – ல் சிக்கிக்கொண்டானே என்று கதறுவான் .  மனிதனின் உணர்ச்சிகளுக்கு முன் மூளையாவது மயிராவது என்பது போன்ற காட்சி அது . அது உண்மைதான் . ஓரிடத்தில் நம்முயிர் போகும் என்று தெரிந்திருந்தாலும் அந்த கணத்தில் நம் உணர்ச்சிதான் மேலிடும் . பைய வீட்டில் அமர்ந்து யோசிக்கும் போது லூசு மாதிரி பன்னுறான்னு மற்றவர்களை நாம் குறை கூறினாலும் அந்த நேரத்தில் தோன்றும் உணர்வுகளின் சக்தி மகத்தானது . மரணத்தைப்பற்றிய பயமில்லாதது.


தன்னைப்பற்றி ஆர்ச்சர் , மேடியிடம் சொல்லும்போது தன் ஆப்ரிக்காவைப்பற்றிய  ஒரு வசனத்தைக் கூறுவான் .
Sometimes I wonder will God ever forgive us for what we've done to each other? Then I look around and I realize God left this place a long time ago.
இந்த வசனத்தை எதுக்காக இங்குமுன்வைத்தேன் என்று தெரியவில்லை . இது படிப்பதற்காக அல்ல ; புரிவதற்காக . இதேபோல் சாலமனின் கேள்விக்கு ஆர்ச்சர் பதிலளிக்கும் காட்சிகளில் வரும் வசனங்களும் அட்டகாசம் . லௌலீக வாழ்க்கையை மிக எளிமையான கேள்விகளால் கேட்பான் சாலமன். 

அதேபோல் மேடிக்கும் ஆர்ச்சருக்குமிடையே உருவாகும் அழகான காதல் கவிதையைப்போன்றது. நான் பார்த்த படங்களிலேயே முதன்முறையாக கிஸ்ஸே அடிக்காத காதலர்கள் , இந்த ஆங்கிலப்படத்தில்தான் இருக்கிறார்கள் .

இதுபோல் பல விஷயங்கள் குறிப்பிட்டு சொல்ல இருந்தாலும் வழக்கம்போல இதுவும் நீளமானதொரு பதிவாகிவிடக்கூடாது என்பதில் நான் கொஞ்சம் கவனம்கொள்ள ஆரம்பித்துவிட்டேன் . ஆர்ச்சராக டீகேப்ரியோ . இவரின் நடிப்பைப்பற்றி தனியொரு பதிவெழுதிவிடலாம் என்பதால் இப்பதிவில் மேற்கொண்டு எதனையும் குறிப்பிட இயலவில்லை . சாலமனாக வாழ்ந்திருப்பவர் ட்ஜுமான் ஹௌன்சௌ ( என்னங்கடா பேரு இது ? ) . கடைசியாக வந்த FAST 7 –ல் மோஸ் எனும் மொசப்பிடிக்கும் வில்லனாக வந்திருப்பாரே ! அவர் தான் . ஆனால் இப்படத்தில் வெறுமனே வராமல் அட்டகாசமாக நடித்தும் இருக்கிறார் . வழக்கம்போல இப்படத்திற்காகவும் ஆஸ்கார் பரிந்துரைக்கப்பட்டு வாசற்படியோடு வெளியே துரத்தப்பட்டார் . ட்ஜூமாவிற்கும் பரிந்துரைக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டார் . சார்லஸ் லிவ்விட்டின் எழுத்தில் உருவான இத்திரைப்படத்திற்கு உயிர்கொடுத்தவர் எட்வர்ட் ஸ்விக் . எட்வர்டுக்கு பக்கபலமாக உயிரோட்டமான இசை கொடுத்தவர் எனக்கு மிகமிகப்பிடித்த இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜேம்ஸ் ஹோவர்ட் ; எட்வர்டின் கனவை திரையில் பிடித்துக்கொடுத்தவர் எடார்டோ செர்ரா .   

BLOOD DIAMOND என்பதற்கான வரலாற்றை பார்க்கத்தேவையில்லை . இப்படத்திலே எதற்காக BLOOD DIAMOND என வைத்தார்கள் என்பதற்கு கிளைமேக்ஸில் விளக்கம் இருக்கிறது . மொத்தத்தில் அருமையான திரைப்படம் . கண்டிப்பாக பாருங்கள் . வன்முறைக்காட்சிகள் போகிறபோக்கில் காட்டப்பட்டாலும் மனதைக் கொஞ்சம் திடமாக வைத்துக்கொண்டே பார்ப்பது நலம் .

Comments

  1. இவ்வளவு எழுத நேரம் இருக்கின்றது ஆனால் நம்மலோட பதிவுக்கு வர நேரமில்லையே அப்படீனாக்கா அவ்வளவு பிஸினு சொல்லுங்க......
    தமிழ் மணம் 1

    ReplyDelete
  2. லௌலீக கேள்விகள்... அட...!

    நல்ல விமர்சனம்...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

FIGHT CLUB – சினிமா விமர்சனம்

MALENA (18+) – சினிமா விமர்சனம்

மீண்டும் ஒரு காதல் - சிறுகதை