கன்னாபிஸ் சாடிவாவும்    சில உண்மைகளும்



கி.பி . 1866 – ல் ராபர்ட் லூயி ஸ்டீவன்சன் எனும் ஸ்காட்லாந்து நாட்டு கவிஞர், நாவலாசிரியர் எழுதிய ஒரு நாவலே தி ஸ்ட்ரேஞ்ச் கேஸ் ஆஃப் டாக்டர் ஜெகில் அன்ட் மிஸ்டர் ஹைட் (The strange case of Dr.Jekyll and Mr.Hyde).இந்த நாவலின் கதைப்படி இரக்ககுணம் கொண்ட மருத்துவர் ஜெகில் தான் கண்டுபிடிக்கும் மருந்தினால் கொடூர குணம் கொண்ட ஹைடாக மாறுகிறார் . அந்த மருந்தின் தாக்கம் முடிந்ததும் டாக்டர் ஜெகிலாக மாறுகிறார் . அவருக்கு தான்தான் ஹைட் என்பதே தெரியாமல் இருக்கிறது . ஒவ்வொரு முறையும் அம்மருந்தை கொண்டு தூங்குவதாக கற்பனை கொள்ளும் ஜெகில் ,ஒரு முறை ஹைடாக மாறும்போது ஒருவரை கொலை செய்துவிடுகிறார் . அதன்பின் அது ஒரு துப்பறியும் நாவலாக சென்று முடிகிறது . அந்த மருந்தினால் ஜெகிலுக்கு ஏற்பட்ட விளைவுகளையும் அதனால் அவருக்குள் ஏற்பட்ட மாற்றங்களையும் ஸ்டீவன்சன் அழகாய் விளக்கியிருப்பார் .நாவல் , பல எதிர்பார்க்காத வருந்ததக்க நிகழ்ச்சிகளுக்கு பின் சோகமாய் முடியும் .




சிவபெருமான் ஒருமுறை சில குடும்ப பிரச்சனையால் கோபமுற்று காட்டில் வந்து அமர்ந்தாராம் . அந்த காட்டில் சில செடிகளே காணப்பட்டதாம் .வெயில் அதிகரித்த காரணத்தினால் ஒரு செடியின் அடியில் சென்று அமர்ந்தாராம் .அந்த செடியோ வெயிலுக்கு பதில் , ஒரு விதகுளுமையான உணர்வும் கூடவே சுகமான சில கற்பனைகளையும் தந்ததாம் . ‘இது என்னடா செடி ‘ என்று அதன் இலைகளை கிள்ளி முகர்ந்து பார்த்தாராம் .பின் அதை வாயல் போட்டு மெல்ல ஆரம்பித்தாராம் . அந்த இலைகள் புத்துணர்வையும் புது சக்தியையும் சிவபெருமானுக்கு அளிக்க , அன்றுமுதல் மனிதர் விரும்பி உண்ணுவாராம் . இதை நான் கூறவில்லை , பழைய புராணக்கதைகள் கூறுகிறது.




விவிலியம் பற்றி பெரும்பாலானோர் அறிந்திருப்பீர்கள் . அதாங்க , பைபிள் . (இங்கிலாந்தில் பைபிளோடு ஒருங்கே வைத்து பாதுகாத்து வரும் மற்றொரு நூல் பற்றி தெரியுமா ? அது சாட்சாத் நம்ம திருக்குறள் தான் .) பைபிளில் ‘தேன்மரம் (HoneyWood) ‘ என்று ஒன்றை குறிப்பிடுகிறார்கள் (Book Of Samuel) . நம் வேதங்களுல் ஒன்றான அதர்வண வேதத்தில் கவலைகளை போக்கும் ஐந்து ராஜ்யங்களிலொன்று ‘பங்’ என குறிப்பிட்டிருக்கிறார்கள் . புகழ்பெற்ற ‘ஆயிரத்து ஓர் இரவுகள் ‘ கதைகளில் ஒரு செடியின் புகழ் பாடப்படுகிறது .கி.பி 9-ஆம் நூற்றாண்டுகளில் ‘இந்திரகன்னா’ அல்லது ‘தெய்வங்களின் உணவு ’ என்றும் புகழப்படுகிறது ஒரு செடி .



மேலே நான் எழுதியிருக்கும் அத்தனையும் ஒரே செடி தான் . அதுதான் ‘கன்னாபீஸ் சாடிவா , ஏழைகளின் சுவர்க்கம் , ராஜபோதை’  என்றழைக்கப்படும் கஞ்சா . என்னடா இவன் கஞ்சா செடியப்பத்தி எழுதுறானேன்னு பாக்கரிங்களா ?  இன்றைய இந்தியாவின் நிலை அவ்வாறு இருக்கிறது . சாதாரணமாய் இன்று பொட்டலங்களுக்குள் 100 க்கும் 200க்கும் விற்கப்படும் கஞ்சாவால் எவ்வளவு பிரச்சனைகள் என்பதை அலசிப்பார்ப்பதே இக்கட்டுரையின் நோக்கம் .

முதலில் மருந்து (Drug) என்றால் என்னவென்று பார்ப்போம் . தமிழில் தான் மருந்து , போதை மருந்து , உணர்ச்சியுன்டாக்கும் மருந்து என பல பல வார்த்தைகள் . ஆனால் , ஆங்கிலத்தில் , பாராசிட்டாமல் மாத்திரைக்கும் Drug தான் , கோகைனும் Drug தான் . உண்மையில் மருந்து என்பது , சாதாரணமாய் நம் உடலில் நிகழும் மாற்றங்களை விரைவாய் அல்லது மெதுவாய் செய்து முடிக்க உட்கொள்ளப்படுவதே ஆகும் . அறுவை சிகிச்சகளின்போது Betadine , Wocadine மற்றும் Polyacrilic Acid போன்றவை உபயோகிப்பார்கள் . ரத்தமானது அறுவை சிகிச்சையின்போது அதிகமாக வெளியேறும் . அப்படி அளவுக்கதிமாக வெளியேறினால் , சரியானபடி ஆபரேட் செய்யமுடியாது . அதேநேரம் தொடர்ந்து ரத்தக்கசிவு இருக்கும் பட்சத்தில் , அந்த ஆபரேசன் சக்சஸ் ஆவது கேள்விக்குறியாகிவிடும் . எனவேதான் மேற்கூரிய கரைசல்களை அறுக்கும்போது அவ்விடத்தில் ஊற்றுவார்கள் . அக்கரைசல்கள் , ரத்தத்தின் உறைதன்மையை அதிகரிக்கச்செய்யும் . அதேநேரத்தில் ரத்தத்தின் போக்கினை குறைக்க செய்யும் .சாதாரணமாகவே நமக்கு அடிபட்டால் , ரத்தப்போக்கு அதிகரிக்கவிடாமல் நமது உடலில் இருக்கும் செல்கள் ரத்தத்தினை உறையவைக்கும் .ஆனால் , அது சாதாரண காயங்களுக்கு மட்டுமே . இவ்வாறு உறையவைக்கும் செயலை துரிதப்படுத்தல் என்பது மட்டுமல்ல . அறுவை சிகிச்சையின்போதும் , பின்னும் கொடுக்கப்படும் ஹாலுசினோஜன்கள் , அவ்விடத்தை மறத்துப்போக செய்யும் .அதாவது உடலின் இயக்கத்தை குறைக்கவைத்தல் நிலை எனலாம் (அபினிலிருந்து பெறப்படும் மார்பின் எனும் போதைப்பொருள் 19ம் நூற்றாண்டில் ஜெர்மன் நாட்டை சார்ந்த செர்டனர் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது .இவை அக்காலங்களில்  எல்லோராலும் , எல்லாஇடங்களிலும் ஹாலுசினோஜன்களாக பயன்படுத்தப்பட்டது .மார்பினின் மூலம் நீண்ட உறக்கத்தில் ஆழ்த்தி , மரணத்தையே உண்டாக்கமுடியும் என்ற இவரின் கண்டுபிடிப்புக்கு ‘மனித குலம் காப்பவர்’ என்று பாராட்டி கௌரவ டாக்டர் பட்டம் அளிக்கப்பட்டது .ஆனால் பின்னர் பற்பல ஏச்சுபேச்சுக்கு ஆளானதால் , மனக்கசப்படைந்த செர்டனர் , தனது கவனத்தை துப்பாக்கிகளின் பக்கம் திருப்பினார் . இம்மருந்து கண்டறியப்பட்ட 18 ஆண்டுகளுக்கு பின் பிரெஞ்ச் மருத்துவர் எட்மி என்பவர் , தனது நண்பரான அகஸ்டிக்கு மார்பினை குடுத்து குடிக்கவைத்து சாகடித்தார். இதைப்பிரேத பரிசோதனையில் கண்டறிந்த பின் மார்பினை மருத்துவ உபயோகம் தாண்டி எதிலும் உபயோகப்படுத்தக்கூடாது என்ற கடுமையான சட்டம் அமலுக்கு வந்தது .  ) இவ்வாறு உடலில் மாற்றங்களை செயற்கையாய் விளைவிக்கும் பொருட்களே Drug  என்றழைக்கப்படன . இந்த மருந்துகளை அளவோடு பயன்படுத்தினால் (அதாவது மருத்துவத்திற்கு) மனித வாழ்வை தழைக்கச்செய்யும் . ஆனால் , எவ்வித கட்டுபாடுமின்றி அளவுக்கு மீறும்போதுதான் அது போதைமருந்து என சாடப்படுகிறது. அந்த மருந்துகள் போலதொன்றுதான் கஞ்சாவும் . கி.பி 50- 70 வரை வாழ்ந்த கிரேக்க மருத்துவ அறிஞர் டயாஸ்கோரிடஸ்  மற்றும் மற்றொரு அறிஞரான கேலன் (கி.பி 131- 201) ஆகிய இருவரும் காதுகளிற் ஏற்படும் கோளாறுகளுக்கு கஞ்சாவை பரிந்துரைத்தனர் . கஞ்சா ஆவியை பெறுவதற்காக கஞ்சா இலைகளை சூடான கற்களில் பரப்பிவைப்பார்கள் கிரேக்க வரலாற்றாசிரியர் ஹெர்டோடஸ் இருவரைப்பற்றியும் குறிப்பிடுகிறார் .



கஞ்சா செடியிலிருந்து 400 க்கும் மேற்பட்ட ரசாயணங்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன . இதில் ஒன்று கூட நம் உடம்பிற்கு ஏற்றதல்ல என்பதுதான் உண்மை .கஞ்சா மகிழ்ச்சியை ஏற்படுத்த அதிலிருக்கும் முக்கிய ரசாயணப்பொருள் டெல்டா – 9 ஹைட்ரோ கன்னா பினால் அல்லது THC .இவை , கஞ்சாவின் இலைகளிலும் பூக்களிலும் அதிகமாய் காணப்படுகின்றன . இந்த THCயைப்பொறுத்துதான் போதை அமையும் .மோதை மருந்து அடிமைகளுக்காக பயன்படுத்தப்படும் கஞ்சாவில் 6% அளவிற்கு THC இருக்கும் . கஞ்சாவின் நார்களில் 0.%4 சதவீதம் அளவிற்கு இந்த THC இருக்கும் . இந்த நார்கள் தான் கயிறு (FIBRES) , டுவைன் நூல் , துணிக்குல்லாய் போன்றவை தயாரிக்க பயன்படுத்தப்படுகின்றன . கஞ்சா செடிகளின் விதையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயானது வார்னிஷ் போன்ற சமாச்சாரங்களுக்கு பயன்படுகிறது . வட இந்தியாவில் ‘பங்’ என்றழைக்கப்படும் மசாலாப்பாலில்  , போதையேற்றுவதற்காக இக்கஞ்சாவை தான் பயன்படுத்துகிறார்கள் (அதாங்க , நம்ம வடிவேலு ‘ஆதவன்’ படத்துல குடிப்பாரே) . மேலும் சர்க்கரை , மிளகு , ஆகியற்றுடன் கஞ்சா இலைகளு அரைத்து ‘தண்டாயி’ எனும் குளிர்ப்பானமும் தயாரிக்கபடுகிறது . இது ஹோலி ஸ்பெசலாக வட இந்தியாவில் அனைவரும் குடித்து மகிழும் ஒரு குளிர்பானம் . மேலும் மஜூன் எனும் ஒரு இனப்பு பண்டமும் பால்கோவா மாதிரி இச்செடியிலிருந்து தயாரிக்கப்படுகறது .

மேலும் இச்செடியில் இருந்து பெறப்படும் ‘ஹஷிஷ்’ எனும் ஒருவகை போதை மருந்தும் குறிப்பிடத்தக்கது . இந்தியாவில் இது பயன்படுத்தப்பட வில்லையெனினும் , வரலாற்றில் இதைப்பற்றிய குறிப்பு உள்ளது . இந்த ஹஷிஷ் உருவாக்கப்படும் முறையே வித்தியாசமானது . கசகசா செடியினை கிழித்து எப்படி ஒபியம் எடுக்கிறார்களோ அதேபோல்தான் . கஞ்சா செடிகளை நன்கு அடர்த்தியாய் வளரவிடுவார்கள் . நன்கு வளர்ந்த செடியில் ‘ரெசின்’ எனும் பிசுபிசுப்பான திரவம் வெளிப்படும் . அத்திரவத்தை கைப்பற்ற ஆட்களை நிர்வானமாக அந்த காட்டினுள் நடமாடச்சொல்லுவார்கள் . உள்ளே சென்று நன்றாய் செடிகளுடன் தேய்த்து வரும் அவ்வாட்களின் உடலில் ‘ரெசின்’ ஒட்டிக்கொண்டிருக்கும் . பின் அவர்களின் உடலில் ஒட்டிக்கொண்டுள்ள ரெசினை ஒரு துணியின் மூலம் தேய்த்து அதிலிருந்து ஹஷஷ் தயாரிப்பார்கள் . இந்த ரெசின் போன்ற திரவம் தான் THC ஐ அதிகளவில் கொண்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது .

கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் நிகழ்ந்த சிலுவைப்போர் பற்றி நீங்கள் படித்திருக்கலாம் . அதாவது கி.பி 1095 முதல் கி.பி 1444 வரை மேற்கு ஐரோப்பாவை சார்ந்த கிறிஸ்தவர்களுக்கும் பாலஸ்தீனத்தை சார்ந்த முஸ்லிம்களுக்குமிடையே , ஜெருசலத்தைக்கைப்பற்ற மாபெரும் போர் உண்டானது . அதை சிலுவைப்போர் என வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுவார்கள் . ஜெருசலேம் அன்று துருக்கிய முஸ்லிம்களின் ஆட்சியில் இருந்தது . அந்நகரில் இயேசுநாதர் கிடத்தப்பட்ட கல்லறை (HOLY SEPULCHRE) இருந்ததால்  , அதைக்கைப்பற்ற கிறிஸ்தவர்கள் போரில் ஈடுபட்டனர் . அவ்வாறு போரிட்ட கிறிஸ்தவர்களை சிலுவைப்போர் வீரர்கள் (CRUSADARS) என்றழைக்கப்பட்டனர் . இவர்கள் ஜெருசேல் நகரை சார்ந்த முஸ்லிம்களை அடிக்கடி தாக்கினர்  . இதனால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் , கொலைகளையே தொழிலாய் செய்யும் கூட்டங்களை நாடிச்சென்றனர் .அவர்கள் கொலை செய்வதை மட்டுமே நோக்கமாய் கொண்டிருந்தனர் .அவர்கள் கொலை செய்ய கிளம்பும்முன் மேலே சொன்ன ஹஷிஷ்சை உண்டுதான் பின்னர் செல்வார்களாம் . அதனால் அப்பகுதி மக்களால் அவர்கள் ஹஷிஷின் என்றழைக்கப்பட்டனர் . பின்னாளில் அசாசின் (ASSASIN) என்ற ஆங்கிலச்சொல் அவர்களைக்குறிக்க தான் பிறந்தது .அந்த பெயரில் கேம் கூட உள்ளது . இதில் வேடிக்கை என்னவென்றால் , அவர்கள் கஞ்சாவிற்கு அடமைப்பட்ட ஒரு கூட்டமே தவிர தொழில்முறை கொலைகாரர்கள் இல்லை . அவர்களுக்கு அப்போதையில் என்னவேண்டுமானலும் சாகசம் செய்யத்தூண்டுமாம் . ஆனால் போதை இறங்கியதும்  , பித்துப்பிடித்தவர்கள் போல் தெருவில் அலைந்தார்களாம் .

இந்த ஹஷிஷ்சை உருவாக்கும் கருவி(ISO -2) இப்போது மேற்கத்திய நாடுகளில் விற்பனையாகிவருகிறது . அவ்வவளவு சட்டசிக்கல்கள் இல்லையென போதிலும் ,  தனிநபர் உபயோகத்திற்கு தடைசெய்யப்பட்டு தான் இருக்கிறது . இருந்தாலும் சில திருட்டு போதைக்குடிகாரர்கள் , இதை சட்டத்திற்கு புறம்பாக வாங்கி ஹோம்மேட் கஞ்சாவை பருகுகிறார்கள் .காரணம் , ஹஷிஷ்-ல் THC ன் அளவு 50 முதல் 60 சதவீதம் வரை இருக்கும் அல்லது உயர்த்தப்படும் .

இதில் கொடுமை என்னவெனில் , கோகைன் , மார்பைன் , அபின் , ப்ரௌன் சுகர் , எல்எஸ்டி போன்ற போதை மருந்துகள் , மனிதரின் உடலில் எவ்வாறு செயல்படுகிறது என்பதை குறைந்தபட்சம் கண்டுபிடிக்கவாது முடியும் . ஆனால் , கஞ்சா உடலில் எவ்வாறு செயல்படுகிறது என்பதை இதுவரை எந்த ஒரு விஞ்ஞானியாலும் கண்டுபிடிக்கமுடியவில்லை . சிலர் மட்டும் தங்களின் யூகங்களை சொல்கின்றனர் . THC நமது உடலில் சில பாகங்களில் ஒட்டிக்கொண்டு செயல்படுகிறது என்பதும் அந்த யூகங்களில் ஒன்று . ஈரல் , மூளை போன்ற இடங்களிலேயே THC ஒட்டிக்கொள்கிறது என்றும் பிற இடங்களைப்பற்றி சரியாய் தெரியவில்லை என்றும் தெரிவிக்கிறார்கள் . மேலும் கஞ்சாவின் HALF LIFE TIME (ஒரு மருந்து நமது உடலில் இருக்கும் நேரத்தை பற்றி குறிப்பிடுவது .) நேரமானது கிட்டத்தட்ட 20 மணிநேரம் .  10 மில்லிகிராம் கஞ்சாவானது நமது உடலில் உட்கொள்ளப்பட்டால் அது 5 மில்லியாக மாறவே 20 மணிநேரம் ஆகும் . மீண்டும் 20 மணிநேரத்துக்குப்பின் தான் 2.5 மில்லி ஆகும் . ஆனால் , மற்ற மருந்துகள் வெளியேறிவிடும் . கஞ்சாவிலோ மீதமிருக்கும் 2.5 மில்லி என்ன ஆனது ? எங்கே போனது என்பதையே கண்டுபிடிக்கமுடியவில்லை . மீதமுள்ள அந்த 2.5 மில்லி , முழுமையாக நீங்க 30 நாட்கள் தேவைப்படுகிறது .

கஞ்சாவின் அழுத்தமான விளைவுகள் பெரும்பாலும் மூளையில்தான் ஏற்படுகின்றன (அ) தாக்குகின்றன . இவர்களுக்கு அரைமணிநேரம் என்பது ஒருமணிநேரமாய் தெரியும் . தான் தெளிவாய் செயல்படுவதாய் நினைத்துக்கொள்ளும் பிரமையான மனநிலை உண்டாகும் . கஞ்சா உட்கொள்பவர் தான் ஒரு அதிதீவிரபுத்திசாலியென நினைத்துக்கொள்வார்கள் . ஆனால் உண்மையில் நிலை அதுவல்ல . வெளிநாட்டில் கஞ்சா அடிக்கும் ஒரு இசைக்குழு இருந்தது . இசைக்குழவினரின் வாத்தியத்தை ரெக்கார்ட் செய்து , அவர்களுக்கு போதை இறங்கியபின் அதை போட்டுக்காட்டினார்களாம் . அதன்பின் தங்களின் தவறுகளை அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள் . அதிலும் ஒருசிலர் , இது போலி தாங்கள் நிஜமான திறமைசாலிகள் என்று சண்டைக்கே வந்துவிட்டார்கள் .  இதேபோல் ஒரு ஓவியரின் நிலையும் ஆனது . கஞ்சாவை தொடர்ந்து பயன்படுத்துபவர்கள் தங்களின் அடிப்படை திறனை இழக்கிறார்கள் . அதனால் தான் கஞ்சா மிகவும் ஆபத்தான பொருளாக கருதப்படுகிறது . கற்பனையிலேயே தங்களின் வாழ்வை ஓட்டிக்கொள்ள ஆரம்பித்துவிடுகிறார்கள் (இன்செப்சன் படத்தில் ஹீரோயின் மாலின் நிலையை ஞாபகம் கொள்க) .மேலும் அனைத்து உணர்வுகளும் அதீத தீவிரமடையும் . வண்ணக்கோலங்கள் அதிகபிரகாசமாகவும் , சூரிய ஓளி கண்ணைப்பறிப்பது போன்றதாகவும் , ஓவிய அமைப்பு நன்கு விளங்குவது , சாதாரண சத்தம் கூடபேரிரைச்சலாய் கேட்பது, நுகர்வு மற்றும் சுவை உணர்வு அதிகரித்தல் போன்றவைகள் மட்டுமில்லாமல் தட்பவெப்ப சூழ்நிலைகளும் அதிகரிக்கும் . கஞ்சாவை புகையிலையுடன் தான் பெரும்பாலும் பிடிக்கிறார்கள் .சாதாரணமாய் ஏற்கனவே கஞ்சாவில் இருக்கும் ரசாயனப்பொருட்களுடன் சிகரெட்டின் ரசாயணப்பொருட்களும் சேர்ந்து தாக்குவதால் ஏற்படும் பின்விளவுகள் கொஞ்சநஞ்சமல்ல,. சிகரெட்டில் பொலேனியம் – 210 எனும் தனிமம் இருப்பது பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம் . இதே பொலேனியத்தின் மற்றொரு வகைதான் அணுகுண்டு வீசப்படும்போது பரவும் கதிர்வீச்சை உண்டுபண்ணும் .  மேலும் புகையிலையில் இருக்கும் ‘தார்’ எனும் நச்சுப்பொருள் கஞ்சாவிலும் ஏராளமாய் இருப்பதால் ,  பெரும் பின்விளைவுகளை உண்டுசெய்கிறது . இதுமட்டுமில்லாமல் கஞ்சாவை புகைத்தவுடன் , தேவையில்லாத பயம் , மனச்சோர்வு அல்லது பல மனோரீதியான குழப்பங்களை ஏற்படுத்துகிறது .மேலும் ஆண்களின் விந்துவிலுள்ள அணுக்களின் எண்ணிக்கை குறைத்து , பலவித சிக்கல்களை உண்டாக்குகின்றன .அதில் முக்கியமானது புத்திரபாக்கியமின்மை . மேலும் இவை சுரப்பிநீர்களின்  இரத்த அளவை குறைப்பதால் ஆண்களின் மார்பகங்கள் தொங்கி போயோ , உள் இழுக்கப்பட்டோ அல்லது பெருத்தோ காணப்படுகிறது . மேலும் உடல் எடை வேறுபாடுகள் போன்றவை ஏற்படுகிறது .  வெளிநாடுகளில் கஞ்சா அடித்து பித்துப்பிடித்து ஓடியவர்கள் எக்கச்சக்கம் . அதாவது , கஞ்சாவை பிடிக்கமுடியாமல் போய்விட்டால் திடீரென தனக்கு கஞ்சா பிடித்ததை போன்ற மனப்பிரம்மை ஏற்பட்டு தெருவில் கத்திக்கொண்டு வெறித்தனமாக திரிவார்களாம் . அந்நேரங்களில் கையில் எதுசிக்கினாலும் எதிரில் வருபவரை மூர்க்கத்தனமாய் கொன்றுவிட்டு போலிஸ் ஸ்டேசனில் சரணடைந்த சம்பவங்களும் ஏராளம் .

கஞ்சா மட்டுமல்ல , மனிதனை அடிமைப்படுத்தும் அனைத்து மருந்துகளுமே மனித இனத்தை அழிவுப்பாதையை நோக்கித்தான் நடத்தும் . (அப்படினா டீ ,காபி யெல்லாம் விட்டுடலாமானு கேட்கறிங்களா ? அடிமைப்படுத்துதல் வேற , பழக்கப்படுத்துதல் வேற . ஆனால் விட்டுவிடுவதும் சாலச்சிறந்ததுதான் ) . நமது நாட்டில் போதை மருந்து பிரச்சனைகளுக்காக 1985 –ஆம் இந்திய அரசு ஒரு முக்கிய சட்டத்தை பிறப்பித்தது ( போதை மருந்துகள் மற்றும் உளக்கிளர்ச்சி பொருட்கள் சட்டம் (NARCOTIC DRUGS AND PSYCHOTROPHIC SUBSTANCE ACT (NDPS ACT)) ) .இதில் மருந்துகளை தவறாக பயன்படுத்தப்படும் பிரச்சனைகளைத்தீர்ப்பதற்கு பல விதிகள் வகுக்கப்பட்டிருந்தன . ஒரு குறிப்பிட்ட அளவைத்தாண்டிய தடைசெய்யப்பட்ட மருந்துப்பொருட்களை எடுத்துச்செல்வது , ஜாமினில் வரமுடியாத அளவிற்கு கடும் குற்றமாக்கப்பட்டது . போதை மருந்திற்காக ஒரு நபர் முதன்முறையாக கைது செய்யப்பட்டிருந்தால்  10 ஆண்டுகள் சிறை மற்றும் 1 லட்சம் அபராதமும் , இரண்டாவது முறையெனில் 20 ஆண்டுகள் சிறை மற்றும் 3 லட்சம் அபராதம் எனவும் கடுமையானதொரு தண்டனையும் வழங்க்கப்பட்டது . 1985 ஆம் ஆண்டு 761 கிலோ ஹெராயன் மற்றும் 1986 ஆம் ஆண்டு 2621 கிலோ ஹெராயினும் கைப்பற்றப்பட்டது (கஞ்சாவைப்பற்றிய சரியான புள்ளவிவரம் கிடைக்கவில்லை ) . ஆனால் , இச்சட்டத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்ட அமெரிக்கா , இந்தியாவிற்கு மறைமுகமாய் கொடுத்த நிர்பந்தத்தால் இச்சட்டத்தினுள் சிலபல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டது . தங்க முக்கோணம் மற்றும் தங்க இளம்பிறை நாடுகளுக்கு மத்தியில் இந்தியா அமைந்ததால் , உலகாளவிய போதைப்பொருள் வணிகம் இந்தியாவை கடந்தே போயாகவேண்டிய சூழ்நிலை .பின் 1989 ம் ஆண்டில் ஒரு டுபாக்கூர் சட்டத்தை காங்கிரஸ் பிறப்பித்து அமெரிக்காவுக்கு அடிபணிந்தது .  அதன்படி சந்தேகத்தின் பேரில் யாரைவேண்டுமானாலும் கைது செய்து இருவருடம் சிறையில் வைக்கலாம் . ஆனாலும் நமது இந்திய போலிசார் , 1992 ல் ஜூன் மாத முதல் வாரத்தில் சுமார் 350 கிலோ ஹெராயினை கைப்பற்றி சாதனை புரிந்தார்கள் . இதில் வேதனை என்னவெனில் உலகிலேயே அதிகளவு பறிமுதல் செய்யப்பட்ட ஹெராயின் அதுதானாம் . ஒரு வாரத்தில் மட்டுமே மாட்டியது அவ்வளவு எனில் மாட்டாமல் 62 வாரமாய் கடத்தப்படும் சரக்கை கணக்குப்போட்டால் , கஞ்சா அடிக்காமலேயே தலை சுற்றுகிறது .

நான் , உங்களை விற்பவர்களை பொறிவைத்து பிடிக்க சொல்லவில்லை . பூனைக்கு ஆசையில்லாமலா பால் சட்டியைத்தேடும் ? உங்கள் நண்பர்களில் யாராவது இவ்வரக்கனின் பிடியில் மாட்டியிருந்தால் , அவர்களுக்கு அதிலிருந்து வெளிவர உங்களால் ஆன முயற்சிகளை செய்யுங்கள் . அதுவும் ஒருவகையில் நாட்டிற்கு செய்யும் நன்மை தான் . ஆண்டுதோறும் போதைப்பொருட்களால் கள்ளமார்க்கெட்டில் நடைபெறும் வியாபாரத்தைக்கணக்கிட்டால் , இந்தியாவின் மொத்தவருமானத்தையும் தூக்கி விழுங்கிவிடும் . மேலும் கருப்புப்பணம் அதிகமாய் புழங்குவதும் இந்த கள்ள மார்க்கெட்களில் தான் . எனக்குத்தெரிந்து கஞ்சா முதலிய பொருட்கள் வடசென்னையின் பல தியேட்டர்களுக்கு எதிரில் இருக்கும் பொட்டிகடைகளில் விற்பதை நேருக்கு நேர் பார்த்திருக்கிறேன் . போதைமருந்துகளை ஒருமுறை மாத்திரம் உட்கொண்டு நிறுத்திவிடலாம் என்ற எண்ணம் யாருக்காவது இருந்தால் இப்போதே மறந்துவிடுங்கள் . ஒருமுறை மட்டும் பாதாளத்தில் பாறைகளுக்கு நடுவே குதித்துவிட்டு வருகிறேன் என்பதைப்போல் தான் அதுவும் . முடிந்தவரை சி்கரெட் , குத்கா , ஹன்ஸ் போன்ற புகையிலைப்பொருட்கள் போன்றவற்றையும் விட்டுவிடுவது அல்லது முயற்சி செய்யாமல் இருப்பது சிறந்தது . ஏனெனில் நான் புகைப்பழக்கத்திலிருந்து விடுபட பட்ட கஷ்டங்கள் ஏராளம் . அனைத்துவிதமான போதைப்பொருட்களும் நம்மை மட்டும் பாதிப்பதோடில்லாமல் , நமக்குப்பின் வரும் சந்ததியினரையும் உண்மை வாழ்வில் பற்றில்லாமல் , நம்பிக்கையின்மை , உடல்சோர்வு , பலமின்மை , சோம்பல் , ஆடிசம் , மனநலகுறைபாடு போன்ற எக்கச்சக்க சிக்கல்களுக்கு ஆளாக்குகிறது . சிறுய கட்டுரையாய் எழுதப்போய் இவ்வளவு பெரிதாகிவிட்டதற்கு மன்னியுங்கள் நண்பர்களே !  புகை , போதையில்லா சமூகமாய் நாம் மாறுவோம் மற்றும் மாற்றுவோம் என்ற உறுதிமொழியுடன் வாழ்க்கையை துவங்க மற்றும் தொடர வாழ்த்துகள் .




Comments

  1. #உங்கள் நண்பர்களில் யாராவது இவ்வரக்கனின் பிடியில் மாட்டியிருந்தால் , அவர்களுக்கு அதிலிருந்து வெளிவர உங்களால் ஆன முயற்சிகளை செய்யுங்கள் .#
    நாய் வாலை நிமிர்த்தி விடலாம் ,அடிக்ட் ஆனவர்களை திருத்தவே முடியாது !

    ReplyDelete
    Replies
    1. எல்லாவற்றிற்கும் மனம் தான் காரணம் அண்ணா ! ஏதோ நம்மால் முயன்ற முயற்சுகளை செய்வோம் ! திருந்துவதும் திருந்தாதும் அவர்களுடைய விருப்பம் . கில்லர்ஜி அண்ணனுக்கு என்னை அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி அண்ணா !

      Delete
  2. சமூக அக்கரையுடன் கூடிய பதிவு நண்பரே.. இதில் விஞ்ஞானத்தையும், மெய்ஞானத்தையும் இணைத்தது அருமை நண்பர் பகவான்ஜி அழைத்து வந்து விட்டார் தங்களின் குடிலுக்கு.... அருமையான பதிவை படித்த திருப்தி நேரமிருப்பின் எமது குடிலுக்கு வருகை தரவும் நன்றி
    அன்புடன்
    தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி

    ReplyDelete
    Replies
    1. கில்லர்ஜியைப்பற்றி தெரியாமல் பதிவுலகத்தில் இருக்கமுடியுமா ? நான் அவ்வபோது உலவும் தளங்களில் தங்களுடையதும் இருக்கிறது அண்ணா ! வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி !!

      Delete
  3. மிக அருமையான விளக்கத்துடன் கூடிய பதிவு நண்பரே .
    அதிகப்படியான மன அழுத்தம் பிறகு புதிய விஷயங்களை செய்து பார்த்தால்தான் என்ன என்ற கியூரியாசிட்டி எல்லாம் சேர்ந்து பழக்கத்துக்கு அடிமையாக்குது ..கண்டிப்பாக இவை அனைத்தும் தடை செய்யப்படவேண்டியவையே ..விழிப்புணர்வு விஷயங்கள் எவ்வளவு பெரிதாக இருந்தாலும் பரவாயில்லை ..thanks for the awareness post .

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அக்கா !

      தாங்கள் கூறியது முற்றிலும் உண்மையே ! இங்கு மட்டுமல்ல , உலகில் அனைத்து மக்களிடமுமிருந்து விலக்கிவைகப்படவேண்டியவை இந்த போதை மருந்துகள் தான்

      Delete

Post a Comment

Popular posts from this blog

FIGHT CLUB – சினிமா விமர்சனம்

MALENA (18+) – சினிமா விமர்சனம்

மீண்டும் ஒரு காதல் - சிறுகதை