CN’s – FOLLOWING – சினிமா விமர்சனம்
கிறிஸ்டோபர் நோலன்
. நீங்கள் ஹாலிவுட்டின் மிகச்சிறந்த படங்களை பார்த்திருப்பீர்கள் என்றால் , இப்பெயரை
கேள்விப்படாமல் இருக்கமுடியாது . மனுஷர் , ஒவ்வொரு படமும் , ஒவ்வொரு விதமாக எடுப்பார்
.இதுவரை எடுத்த படங்களின் கதைச்சூழல் , ஒவ்வொன்றிலும் வெவ்வேறாகதான் இருக்கும் . முதல்
படமான FOLLOWING முதல் , கடைசியில் வெளிவந்த THE DARK KNIGHT RISES வரை , ஒவ்வொன்றும்
ஒவ்வொரு விதம் .இவர் இப்போது எடுத்துக்கொண்டிருக்கும் படமான INTERSTELLER திரைப்படம்
, நவம்பரில் வெளியாக உள்ளது. எப்படியும் அந்த படம் ரிலிசானவுடன் ,வலைப்பதிவு உலகத்தில்
,ஹாலிவுட் விமர்சகர்களால் குறைந்தது ஒரு மாதத்திற்காவாது உச்சரிக்கப்படும் பெயர் ,இவருடையதாகதான்
இருக்கும் . அதனால் , அவரின் ஒவ்வொரு படங்களையும் , ஒரு சின்ன தொடர்பதிவாக , இப்போதே
எழுதி தள்ளவிடலாம் என்றிருக்கிறேன் .
பொதுவாக , ரேட்டிங்
எனப்படும் தரவரிசையில் சாதிக்கும் படங்கள் , வசூலில் கவிழ்ந்துவிடும் . ஆனால் , வசூலிலும்
கலக்கிவிட்டு , ரேட்டிங்கிலும் இடம்பெறும் வகையறா படங்கள் தான் நோலனின் படங்கள் . இவரின்
ஒவ்வொரு படமும் , ஒரு இலக்கியம் போன்றதுதான். ஒவ்வொரு படைப்பும் ஒருவித அனுபவத்தை கொடுக்கும்
. ஒரு படம் , நமக்குள் என்ன செய்யும் ? பெரும்பாலும் நம் மூளையை உறங்கச்செய்துவிட்டு
, உணர்ச்சியுடன்விளையாடும் . ஆனால் , இவரின் படங்களோ , உணர்ச்சிகளை ஓரங்கட்டிவிட்டு
, மூளையை கசக்கிப்பிழிந்து வேலைவாங்கும் . நம்ப முடியாத விஷயங்களை கூட , அழகாக நம்மை
நம்பவைத்து , ஏமாற்றி , நம் மூளையுடன் இரண்டு மணிநேரம் , மென்மையாக விளையாடுவதுதான்
,நோலனின் தனித்துவம் . திகில் படங்களிலோ , க்ரைம் படங்களிலோ , வில்லன் யாரென்று கண்டுபிடிக்கத்தான்
நம் மனம் , அலைபாயும் .ஆனால் இவரின் படங்களில் ,
கதை என்ன என்று தேடவைக்கும் .
சரி,
FOLLOWING கதைக்கு வரலாம் .
மற்றவர்களை பின்தொடர்வதே
எனது வேலை என்று ஒருவன் போலிசிடம் சொல்வதாக , படம் ஆரம்பிக்கும் . எழுத்தாளனாக வேண்டும்
என்பதை , லட்சியமாக கொண்டுள்ள ஒரு இளைஞன் . அதற்காக , மற்றவர்களை பின்தொடர்ந்து , அவர்களின்
வாழ்க்கைச்சூழலை அறிந்து கொள்ள முயற்சிக்கிறான் . அதிலிருந்து , தனக்கு தேவைப்படும்
கதை கிட்டலாம் என்பதே அவனது எண்ணம் . அவனுக்கென்று சில விதிகளை , அவனே உருவாக்கிக்கொள்கிறான்
. யாரையும் அதிக காலம் பின்தொடரக்கூடாது . பெண்களை பின்தொடர்தல் கூடாது. அதேபோல் ,
தான் பின்தொடரும் மனிதர்களின் வசிப்பிடத்தைத்தெரிந்து கொண்டால் , அப்போதே அவர்களை மறந்துவிட்டு
வெளியேறிவிடவேண்டும் . ஒருவனை பின்தொடர்ந்துசென்றால்
, மீண்டும் அவனைபின்தொடரல் கூடாது. இது போன்ற சில விதிகளை உருவாக்கிக்கொள்கிறான் .
அந்நேரத்தில் ஒருவனை தொடரும்போது , அவனிடம்
மாட்டிக்கொள்கிறான் . அவனிடம் , உண்மையைக்கூறிவிடுகிறான் . அவனோ , தன் பெயர்
காப் எனவும் ,அவனுடன் வந்தால் , சில இன்ட்ரஸ்டிங்கான விஷயங்களை காட்டுவதாகவும் கூறி
ஒரு வீட்டிற்கு அழைத்துச்செல்கிறான் . யாருடையவீடு என்பது அறியாமலே ஹீரோ, அவனை பின்தொடர்கிறான்
. அங்கு சென்ற காப் , ஹீரோவிடம் அந்த வீட்டில் வாழ்பவர்கள் எப்படிப்பட்டவர்கள்
என்பதை , அவ்வீட்டின் சூழலை வைத்தே விளக்குகிறான் . ‘காப்’ உடன் பழகும் நாட்களில்
, அடுத்தவர் வீட்டின் சுற்றுச்சூழலைக்கொண்டே அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதையும்
, மற்றவர் இடங்களில் எவ்வாறு நுழைவது என்பதையும் , அரையும்குறையுமாக ஹீரோ அறிந்து வைத்திருப்பார் . அதேநேரத்தில் ஹீரோ , ஒரு பாரில் அழகான பெண்ணைப்பார்க்கிறார்
. அவள் முகத்தில் ஏதோ ஒருவிதமான கஷ்டங்கள் தெரியவர , அவளையும் பின்தொடர்கிறான் . அவளிடம்
பேசும்போது , தன்னை அந்த பாரின் ஓனர் கடத்தி வைத்து சித்தரவதைப்படுத்துவதாகவும் , அவன்
ஒரு கேங்ஸ்டர் எனவும் கூறுகிறாள் . அவளுடன் பழக பழக , ஹீரோ அவளை காதலிக்க ஆரம்பிக்கிறார்
. அவளை அங்கிருந்து காப்பாற்ற வேண்டும் என முடிவு செய்கிறான் . அதற்கு அவளோ , தன்னுடைய
அந்தரங்க புகைப்படங்கள் அந்த ரவுடியிடம் இருப்பதாகவும் , தான் எங்காவது வெளியேறினால்
, அதை வெளியிட்டுவிடுவதாகவும் கூறுகிறாள் . அவளை காப்பாற்ற ஹீரோ , ‘காப்’பிடம் உதவி கேட்கிறார் . ‘காப்’போ
, தன்னைப்பற்றிய உண்மைகளை அவளிடம் எதற்காக கூறினாய் என்று , ஹீரோவை நாலு சாத்து சாத்துகிறார்
. அதன்பின் , ‘காப்’பிற்கு பணம் தருவதாக கூறி, ஹீரோ அவனிடம் வேண்டுகிறார்.’காப்’பும் அங்கு நுழைய ஐடியா
கொடுக்கிறார் . ஹீரோவிற்கு தேவையானது , அந்த பாரில் , ரகசிய இடத்தில் பதுக்கிவைக்கப்பட்டிப்பதாக
கூறிய ஹீரோயினின் , அந்த மாதிரியான படங்கள் . அங்கு சென்று பார்த்தால் , அம்மாதிரியான
படங்கள் எதுவுமில்லை . சரி ,காப்பிற்கு கொடுக்கவேண்டிய பணத்தை , அந்த பாரில் இருந்து
கொள்ளையடித்துவிட்டு வெளியே தப்பிக்கமுயலும்போது , பாரில் வேலைசெய்யும் ஒருவன் , ஹீரோவை
பார்த்துவிட , அவனை அடித்துவிட்டு , ஹீரோ வந்துவிடுவார்
.ஹீரோயின் தன்னை ஏமாற்றிவிட்டாள் என்று அறிந்த
ஹீரோ , இவையனைத்தும் காப்பின் திட்டங்கள் என்று கண்டுபிடித்து , போலிசிடம் சென்று நடந்த உண்மைகளை கூறுவான் . அதன்பின் , முடிவு யாரும் எதிர்பாராதது . ஏன், அந்த படத்தில்
ஹீரோவுக்கே , முடிவு எதிர்பாராதது தான் . அவ்வளவு நேரம் நாம் ஒருவனை ஹீரோவாக நினைத்துக்கொண்டிருக்கும்போது
, ‘செல்லக்குட்டி ! அவரு ஹீரோனு யார் சொன்னா ? இவருதான் ஹீரோ’னு நோலன் , ‘நச்’சென்று
ஒரு ட்விஸ்ட் வைத்து படத்தை முடித்திருப்பார் .
இதே கதையை , எங்கோ
பார்த்தது போலோ , கேட்டது போலோ இருந்தால் , உங்கள் ஞாபகத்திறன் அதிகம் என்றுதான் அர்த்தம்
. ஜெய் எனும் ஆஸ்கார்விருது வாங்கப்போகும் நாயகர் ஒருவர் நடித்து ‘வாமனன்’ எனும் பெயரில்
, இப்படத்தினை ‘உல்டா’வாக்கியிருப்பார்கள் . ஆனால் , இப்படம் இமயமலை உயரம் எனில் ,
அந்தப்படம் பரங்கிமலை உயரம்கூட வராது . இதே படத்தை அப்படியே காப்பியடித்து எடுத்திருக்கலாம்
. நோலன் , என்ன இங்கவந்து பாக்கவா போறாரு ?
மேலே நான் கூறியவாறு
படத்தை எடுத்திருந்தால் , இது ஒரு சுமாரான படமாகமுடிந்திருக்கும் . ஆனால் , இப்படத்தின்
திரைக்கதை அமைப்பை , நான்-லீனியர் அமைப்பில் எழுதி இருப்பதால் , இது ஒரு ஸ்பெஷல் படமாக
இருக்கின்றது . பொதுவாக திரைக்கதையில் பலவிதம் உண்டு. அதை ரசிகர்களின் முன்னிலையில்
எடுத்துச்சொல்லும் விதத்தைப்பொறுத்து , லீனியர் , நான்- லீனியர் என்று பிரிக்கலாம்
.1,2,3,4,5,6,7,8,9 என்று வழக்கமான பாணியில் எண்களை சொன்னால் , அது லீனியர் . அதுவே
3,6,1,5,8,2,4 என்று மாற்றி மாற்றி கூறிவிட்டு , கடைசியில் நமக்கு அனைத்து எண்களையும்
புரியவைக்கும் பாணியே , நான்-லீனியர். இதில் , இரண்டாம் வகைசார்ந்தவர் தான் நோலன்
. இப்போதெல்லாம் ,ப்ளாக்பஸ்டர் வட்டத்தில் சிக்கிக்கொண்டதால் , முன்போல் நான் – லீனியர்
வகையறா படங்களை எடுப்பதில்லை .
இவரிடம் ஒரு பேட்டியில் , நான்- லீனியர் பற்றிய ஒரு கேள்வி
கேட்கப்பட , அதற்கு நோலன் ‘முதலில் ஒரு காட்சியினை காண்பித்துவிட்டு , பின் வேறுகாலகட்டங்களில்
நிகழும் காட்சியை காண்பிக்கிறேன் . பின் மீண்டும் முதல் காட்சியின் தொடர்ச்சியினை காட்டப்படும்போது
, பார்வையாளர்களுக்கு , அக்காட்சியின் தொடர்ச்சி , சரிவர பினைந்திருக்கவேண்டும் என்ற
அவசியம் ஏற்படாது .ஏனெனில் , அவர்களின் மனதினுள் , அக்காட்சியினை ஏற்கனவே தொடர்பு படுத்தியிருப்பார்கள்’
என்றார் . கிட்டத்தட்ட , இவரின் படங்களில் , THE DARK KNIGHT TRIOLOGY மற்றும்
INCEPTION தவிர , மற்ற அனைத்தும் இம்மாதிரியான ரகங்களே !
நோலனின் படைப்புகளுக்கு
, மாபெரும் தூண் என்றால் , அது திரைக்கதை . நோலன் படம் என்றாலே , அதில் திரைக்கதைதான்
முக்கிய பங்கு வகிக்கும் ..இவரும் , இவருடைய சகோதரர் , ஜொனதன் நோலனும் சேர்ந்து திரைக்கதை
எழுதுகிறார்கள் என்றால் , நமக்கு குறைந்தது 3 தடவையாவது பார்க்கும்படியான , ஒரு அற்புத
திரைப்படம் கிடைக்கும் என்று தாராளமாக நம்பலாம் . இன்றும் உலகளவில் சிறந்த திரைக்கதை
அம்சங்கள் உடைய 3 படங்களில் ‘MEMENTO’வும் ஒன்று . நோலன் படைக்கும் பாத்திரங்களை பெரும்பாலும்
உளவியல் , மனோதத்துவ ரீதியாக அணுகி , நம் கண்களின்முன் உலாவிட்டிருப்பார் . இதுவரை
இவர் படைத்த பாத்திரங்களான ‘COPP’ முதல்
‘BRUCE WAYNE’ வரை அத்தனை கேரக்டர்களையும்
,மேற்கண்டவாறே அணுகியிருப்பார் .
இந்த படம் எடுப்பதற்கு
, நோலனுக்கு இரண்டு விஷயங்கள் , உந்துதலாக இருந்ததாம் . ஒன்று, அவர் வாழ்ந்த கூட்ட
நெரிசல்மிக்க லண்டன் மாநகரம் . மற்றொன்று , அவருடைய அபார்ட்மென்டில் நடந்த ஒரு திருட்டுச்சம்பவம்
. இதை இரண்டையும் கொண்டு அவர் யோசிக்கும்போது சிக்கியதே , FOLLOWING படத்தின் கதை
. படத்தின் நீளம் 1 மணிநேரம் 10 நிமிடம் .
இப்படத்தை பார்க்கும்போது , இன்னும் இரண்டு நிமிடங்கள்தான் இருக்கிறது . எப்படி
படத்தை முடிப்பார்கள் ? ஒன்றுமே புரியவில்லையே என்று மண்டையை குழப்பிக்கொண்டிருக்கும்போது
, கடைசி இரண்டு நிமிடங்களில் , அந்த ஒரு மணிநேர குழப்பங்களையும் , அசால்டாக நோலன் முடித்துவைத்திருப்பார்
.
இப்படம் எடுக்க
,தயாரிப்பாளர்கள் யாரும் முன்வரவில்லை என்று கூறுவதைவிட , இல்லை என்றே சொல்லலாம் .
இப்படத்தின் தயாரிப்பாளர்கள் யாரென்று பார்த்தால் நோலனின் காதலியான எம்மா தாமஸ் , மற்றும்
நோலன் , அடுத்து இப்படத்தில் ஹீரோவாக வரும் நோலனின் நண்பர் ஜெர்மி ஆகியோர் தான் . இவ்வளவுதான் பட்ஜெட் என்று அறுதியிட்டு
எடுக்கப்படாத திரைப்படம் . பணம் கையிலிருந்தால் 16 MM கேமராவைத்தூக்கிக்கொண்டு , வார
இறுதியில் படம்பிடிக்க கிளம்பிவிடுவார்களாம் . இந்த கேமராவில் எடுக்கப்படும் படம்
, தியேட்டரில் திரையிடமுடியாது. நம் பள்ளிகளில் , ஏதேனும் காட்சிகளை ப்ரஜெக்டரில் காட்டுவார்கள்
அல்லவா ? அந்த திரைக்குத்தான் உகந்தது .(பின்னாளில் , இத்திரைப்படம் 35 MMக்கு மாற்றப்பட்டு
, ரிலிஸானது என்பது தனிக்கதை .) ஷூட்டிங் ஸ்பாட் , லொகேஷன் என்று எதற்கும் அலையவில்லை
. நோலனின் அபார்ட்மென்ட் மற்றும் அவரின் நண்பர்களின் வீடுகளைச்சுற்றியே , இப்படத்தை
எடுத்துமுடித்தார்களாம் . படத்தில் வரும் ரெஸ்டாரன்ட் மற்றும் பார்காட்சிகள் கூட ,நோலனின்
நண்பர்களுடைய இடங்களில் எடுக்கப்பட்டது . நம்மிடம் பணம் இல்லையெனில் , கலரில் ஒருபடத்தை
ஸ்டைலிஷாக எடுப்பது முடியாத காரியம் . அப்படி எடுத்தாலும் , அது படுகேவலமான லுக்கையே
தரும் . அதற்குபதில் , ஸ்டைலிஷாக கருப்பு-வெள்ளையலே எடுத்துவிட்டு செல்லலாம் என்பது
நோலனின் முடிவு . அது , படம் பார்க்கும்போது , பார்ப்பவர்களுக்கு நன்றாக உணர்த்தியிருப்பார் . இப்படத்தில் , ஹீரோயினாக
நடித்தவரைத்தவிர அத்தனைபேரும் , நோலனின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மாத்திரமே !
குடும்ப படம் என்று முடிவு செய்துவிடாதீர்கள் . மற்றவர்களை நடிக்க அழைத்தால் , அவர்களுக்கு
சம்பளம் கொடுக்கவேண்டும் என்ற காரணத்தினால் தான் . ஹீரோயின் மாத்திரம் ஒரு தொழில்நடிகை
. படம் எடுக்கப்படுவதற்குமுன் , ஆறுமாத காலம் , வெறும் ஒத்திகை மாத்திரமே பார்த்தாராம்
. ஒரு பைசாகூட வீணாகிவிடக்கூடாது என்பதில் முழுகுறியாயிருந்த நோலன் , இப்படத்தின் ஷூட்டிங்கின்போது , பெரும்பாலான காட்சிகள் ஒரே டேக்கில் ஓ.கே ஆக்கிவிட்டாராம்
.சில காட்சிகள் மட்டும் , இரண்டாவது டேக் . ஆனால் , இரண்டு டேக்குகளுக்க மேல் எக்காட்சியும்
எடுக்கப்படவில்லை. இந்த படத்தின் பட்ஜெட் , மொத்தம் 6000 டாலர் . உலகின் அடிமட்ட பட்ஜெட்டில்
எடுக்கப்பட்ட சிறப்பான திரைப்படங்களில் , இதுவும் ஒன்றாய் திகழ்கிறது . இந்த பட்ஜெட்டைக்கொண்டு
, 1998 களில் கூட , எந்த தமிழ்ப்படமும் எடுத்திருக்கமாட்டார்கள் என்று நினைக்கிறேன்
.
அடுத்து , இந்த
படத்தின் டெக்னிசியன்கள் என்று பார்த்தால், எல்லாமே நோலன்தான் . கேமராமேனும் அவர்தான்,
எடிட்டரும் அவர்தான் . இசைமாத்திரமே வேறொருவர் . T.R கணக்காய் , கதை , திரைக்கதை, வசனம்
, ஒளிப்பதிவு , எடிட்டிங் , இயக்கம் , தயாரிப்பு என எல்லா வேலைகளையும் நோலனே சிறப்பாக
செய்துள்ளார் .
கிட்டத்தட்ட ,
இந்தியமதிப்பில் இரண்டு லட்சம் ரூபாயில் (1998 ல் , அமெரிக்க டாலர் , இந்திய மதிப்பில்
40 ரூபாய்க்கும் குறைவு என நினைக்கிறேன் .) எடுக்கப்பட்ட இத்திரைப்படம் , இன்று
100 கோடியில் எடுக்கப்படும் திரைப்படங்கள் தராத அனுபவத்தை , நமக்கு கொடுக்கும் வகையில்
உள்ளது . இந்த படத்திற்கு பின்னர்தான் , மெமெண்டோ எனும் மாபெரும் திரைக்குழப்பத்தை
உருவாக்கினார் ! மெமென்டோவைப்பற்றி , அடுத்த பதிவில் காணலாம் .
இதன் தொடர்ச்சிப்பதிவான , மெமென்டோவைப்பற்றி படிக்க இங்கே அழுத்துங்கள்
இதன் தொடர்ச்சிப்பதிவான , மெமென்டோவைப்பற்றி படிக்க இங்கே அழுத்துங்கள்
சிறந்த திறனாய்வுப் பகிர்வு
ReplyDeleteதொடருங்கள்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா !!!
Deleteவாமன அவதாரம் கூட உல்டாதானா ?
ReplyDeleteகிட்டத்தட்ட நம்ம கஜினில முருகதாஸ் என்ன செஞ்சாரோ , அதையே தாங்ணா வாமனன்லயும் பண்ணிருப்பாங்க . இந்த கான்செப்ட வச்சி, காதல் , காமெடினு என்னன்னவோ தூவி விட்ருப்பாய்ங்க !
Deletenice revew
ReplyDeleteநன்றிங்க அனானி !!
Deletesuper ji.
ReplyDeleteThanks Thala !!
DeleteThiis is a great post
ReplyDelete