பயணம் @ டைம் மெஷின்-2




அத்தியாயம்-1 ஐப்படிக்க இங்கே அழுத்துங்கள்




அத்தியாயம்-2



கி.பி-1 ஆம் நூற்றாண்டு


நாள்-26.03.0010


எனக்கு அடித்த போதை அப்படியே இறங்கியது.திருவிழாவில் தொலைந்துபோன புதுப்பொண்டாட்டி போல்,பேந்த பேந்த முழித்துக்கொண்டிருந்தேன்.பாலாவோ,அந்த நாசாமாய்ப்போன டைம் மெஷினில் என்ன கருமத்தையோ செய்துகொண்டிருந்தான்.

‘என்னடா செய்ற?’

‘ ஃப்யூல் செக் பன்றேன் மச்சி ’

‘பண்ணு பண்ணு’

வேறெதுவும் சொல்லத்தோணவில்லை.நான் அந்நேரத்தில் இருந்த இடத்தைப்பார்த்தேன். டிவியில் அடிக்கடிக்காட்டும் அமேசான் காடு ஞாபகமே என்னுள் வந்தது.கிட்டத்தட்ட யாரும் இல்லாத ஒரு வனாந்தரம்.

‘மச்சி,ஃப்யூல் கொஞ்சம்தான்டா இருக்கு’

‘சரி,என்ன பன்னலாம்?’

‘தெரில மச்சி.இத வச்சி 100,200 வருஷம்தான் ட்ராவல் பண்ணமுடியும்!!!

அவனுடைய பதில், என்னை கோவத்தின் உச்சிக்கே கொண்டுசென்றத.வேறு வழியில்லை.என்னை மறுபடியும் வீட்டிற்கு கூட்டிச்செல்ல அவனால் மட்டுமே முடியும்.கோவத்தை அடக்கிக்கொண்டு என் மொபைல் போனை எடுத்துப்பார்த்தேன்.அதில் NO SERVICE என்று வந்தது.

‘What the ____ ,Its impossible.சேட்டிலைட் கவரேஜ்னு சொல்லி சிம்ம வித்தானுங்க.ஆனா, ஒரு பாயின்ட் கூட சிக்னல் இல்ல’

‘மச்சி,நாம 2015 வருஷம் முன்னாடி இருக்கோம்டா.இந்த காலத்துல ஏதுடா சேட்டிலைட்?’

அவன் சொன்ன பதில் என்னை குழப்பியது.நாம எங்க இருந்தா என்ன?இவனுங்க ஒழுங்கா சிக்னல் கொடுக்கனும்ல.நா என்ன  சனி கிரகத்துலயா இருக்கேன்.செவ்வாய் கிரகத்துல இருக்க என் சித்தப்பா கூட ஸ்கைப்லபேசும்போது அவ்வளவு கிளாரிட்டியா இருந்துச்சி.

‘சரி,என்ன இழவோ,தயவு செஞ்சி எதாச்சும் பண்ணி, என்ன ஊட்டுக்கு கொண்டுபோயிடுடா.உனக்கு புண்ணியமா போகும்.இந்த காட்ட பாத்தாவே அவதார் எஃபக்ட் வருது’

‘Without fuel, We cant go back. புரிஞ்சிக்க மச்சி’

அவன் கூறியதிலிருந்து, இரண்டு விஷயம் புரிய ஆரம்பித்தது.ஒன்று,பெட்ரோல் இல்லாமல் போகவே முடியாது,மற்றொன்று நாங்கள் எப்போதும் மீண்டும் எங்களுடைய காலத்திற்கு போகவே முடியாது.எனக்கு அழுகையே வரும்போல் ஆயிற்று.என்னை தைரியப்படுத்தும் சாக்கில் பாலாவும் கிட்டத்தட்ட அழ ஆரம்பித்து விட்டான்.எனக்கு அவன் அழுவதைப்பார்த்தபோது சின்ன நிம்மதி இருந்தாலும்,அவன்மீது திடீர் கரிசணம் வந்தது.

‘விடு மச்சி.இதுல உன் தப்பு எதுவும் இல்லடா.நான்தான் தேவையில்லாம உன்கிட்ட கீதாவ பத்தி பேசுனேன்.அதுனால தான் இப்படி ஆச்சு.என்ன மன்னிச்சிடுடா’

‘இல்லடா,கிளம்புறேன்னு சொன்ன உன்ன இருக்கசொல்லி கம்பல் பன்னி ,இப்போ உன் வாழ்க்கையவே நான்தான்டா அழிச்சிட்டேன்.என்ன மன்னிச்சிடு மச்சி.’

‘விடுடா,பரவால்ல.சரி இப்போ என்ன பன்னலாம்?’

‘இரு மச்சி ,யோசிக்கிறேன்’

அவனை யோசிக்க சொல்லிவிட்டு மெதுவாக அமர்ந்தேன்.என் கடிகாரத்தில் மணி 1-ஐ காட்டியது.மணியைப்பார்த்ததும் வயறு அலாரம் அடிக்க ஆரம்பித்தது.

‘மச்சி,சாப்ட எதாவது இருக்கா?’

‘இல்லடா’

‘சரி இரு. இந்த காட்டுல ஏதாச்சும் இருக்கானு தேடிப்பாக்றேன்’

‘மச்சி,தனியா விட்டுட்டு போகாதடா.நானும் வர்ரேன்’

இதை அவன் சொல்லுவான் என்று எனக்குத்தெரியும்.

‘அப்போ இந்த டப்பாவை யாருடா பாத்துகிறது?’

‘கொஞ்சம் ஹெல்ப் பண்ணு.எங்கயாச்சும் தள்ளின்னுப்போய் மறைச்சி வைச்சிடலாம்’

அதை இழுத்துக்கொண்டு சென்று ஒரு புதரில் நிறுத்தினோம்.பின் அதன்மீது இலை மற்றும் செடியைப்போட்டு மூடினோம்.பின் , மெல்ல அந்த காட்டை ஒரு நோட்டம் விட்டேன்.அழகிய வனம்.ஆனால், சாப்பிட எதுவும் இருக்கிறதா என்பது சந்தேகம்தான்.என் சிறுவயதில் MAN VS WILD என்ற தொலைக்காட்சி தொடர் ஞாபகத்துக்கு வந்தது.




ஹீரோ தனியாக காடு, மலை ,பாலைவனம் போன்ற பகுதிகளில் மாட்டிக்கொண்டால்எப்படி தப்பவேண்டும் என்பதை சொல்லியிருப்பார்.ஆனால் நாங்கள் இருப்பதோ 1ம் நூற்றாண்டு.நாங்கள் செல்லும் வழியெங்கிலும் கருநிற மயில்கள், தத்தம் கூட்டத்தோடு எங்கள் பாதையினூடே ,அவற்றின் பயணத்தை தொடர்ந்து கொண்டிருந்தன.என்னதான் இப்படி வந்து மாட்டிக்கொண்டேமே என்ற எண்ணத்தின் பின்னூடே,நாம் காலம் கடந்து நிற்கிறோம் என்ற ஆறுதல் அவ்வப்போது என்னை போதைக்குள்ளாக்கியது.வழியெங்கும் மயில்களைப்பார்த்த நான்




‘மச்சி, எவ்ளோ மயில் பாத்தியாடா?’

‘ஆமா மச்சி. அதுனாலதான் மயிலாப்பூர்னு பேர் வந்திருக்குனு நினைக்கிறன்’

அவன் கூறிய கருத்து,எனக்கும் சரியென தோன்றியது.சுமார் 30 நிமிட நடைக்குப்பின் தூரத்தில் ஒரு குடிசையைக்கண்டோம்.எங்களால் நம்பவே முடியவில்லை.இங்கு மனிதர்கள் இருக்கிறார்கள், என்ற எண்ணம் எங்களின் நம்பிக்கைச்செடிக்கு,நீர் போன்றமைந்தது.வேகமாக அக்குடிசையை நோக்கி நடந்தோம்.அக்குடிசையின் வெளியே இருந்து, நானும் பாலாவும் கோராசாக அழைத்தோம்.

‘சார்!! யாராச்சும் இருக்கிங்களா?’

‘யாரய்ய தாங்கள்?’

ஒரு அழகிய பெண்குரல். ஒரு சிறிய சந்தோஷம் மனதில்.குரலைப்போல பெண்ணும் அழகாயிருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொண்டேன்.அவள் வெளியே வந்தாள்.ஒரு நூற்சேலை தலையை தவிர அனைத்து அங்கத்தையும் தழுவிக்கொண்டிருந்தது,தலைமுடிந்த கொண்டை,கொண்டையைச்சுற்றி மல்லிகைப்பூ பாதுகாப்பு வளையத்துடன் காட்சியளித்தது.சிக்கச்சிவந்த குங்குமம் அவள் நெற்றியில் பெருவட்டமாய் வீற்றிருக்க, முகம் முழுதும் மஞ்சளுக்கு வாழ்க்கை கொடுத்துக்கொண்டிருந்தது.சிறு பருவும் இன்றி, சுருக்கத்தின் சாயலே இல்லாமல் கிட்டத்தட்ட 25 வயதுடையவளாக காட்சியளித்தாள்.கழுத்தில், ஒரு பெரிய மஞ்சள் கயிறைக்கண்டதும் அதற்குகீழ் வர்ணிக்க இயலாமல் போய்விட்டது.

‘யாரய்யா தாங்கள்? என்ன வேண்டும்? ’

அந்த பெண் எங்கள் இருவரையும் பார்த்தத்தும் சிறிது அதிர்ச்சியும் சிறிது குழப்பமும், நிறைய ஆச்சரியத்தையும் அவள் முகத்தில் காண முடிந்தது.ஆனால் , அவள் முகத்தில் சிறிது கூட அச்சம் என்ற ரேகை ஓடவில்லை. மாறாக எங்களுக்குத்தான் அது பெருக்கெடுத்து ஓடியது.அவளின் கேள்விக்கு பாலா தான் பதிலளித்தான்.

‘மேடம். நாங்க 21 ம் நூற்றாண்டுல இருந்து வறோம். வர்ற வழியில வண்டி ரிப்பேர்.அதான் உங்க கிட்ட ஏதாச்சும் ஹெல்ப் கேட்கலாம்னு வந்தேன்.வீட்டுல சார் இருக்காறா?’

நாங்கள் கூறியது ஒன்றும் அவளுக்கு விளங்கவில்லை.எங்களைவிட அதிக குழப்பத்தில் காணப்பட்டது அவளின் முகம்.பின் மீண்டும் பாலா ஏதோ கூற முயற்சித்தான்.

‘அம்மா! நாங்கள் வேறு ஊரைச்சேர்ந்தவர்கள்.வரும் வழியில் சிறிய பிரச்சினை.உதவிக்கு ஆட்கள் தேவை.ஐயா யாராவது இருக்காங்லா?நாங்கள் பசியில் இருக்கிறோம்.தயவு செய்து உதவவும்’

அப்பெண்,பசி எனும் சொல்லைக்கேட்டதும் உடனே வீட்டிற்குள் சென்றாள்.பின் கையில் ஒரு மண் சொம்புடன் வந்நது நின்று,

சிரத்தை அலம்பி வாரும் ஐயா.போஜனம் செய்வீர்களாயின’

என்றாள்,அவள் கூறிய வார்த்தை எனக்குபுரிய வில்லையாயினும், மொத்தத்தில் சாப்பிட அழைக்கிறாரகள் என்பது மட்டும் புரிந்தது.மேலும் இனி அவர்கள் பேசுவதை அப்படியே உங்களுக்கு சொல்லாமல், எனக்கு புரிந்ததை உங்களுக்கு விளக்குகிறேன்.
தமிழ் பற்றி சிறிது அறிவு இருக்கும் பாலாவை நினைத்து எனக்கு பெருமை பொங்கியது.இன்முகத்துடன் கையை கழுவி வீட்டினுள் சென்றோம்.

ஓலைக்குடிசை வீடு.மிகச்சிறிய 2 அறை.ஒரு பக்கம் சில தெய்வங்கள் சிலை மண்ணாலும் கல்லாலும் இருந்தன.இன்னொரு பக்கம் ஏதோ வடநாட்டு சாமியாரின் உருவச்சிலை இருந்தது.ஆனால்,அவ்வீட்டில் ஒரு பாக்டிரியா,வைரஸ் கூட வாழமுடியாத அளவிற்கு அவ்வளவு சுத்தமாக இருந்தது.வெறும் மாட்டுச்சாணத்தைக்கொண்டே பழுப்பு மார்பில்ஸின் வழவழப்புத்தண்மையை தரையில் இருப்பதை உணர முடிந்தது.திடிரென ஒரு பெரிய கொடுவாளைக்கொண்டு எங்களை நோக்கி வந்தாள்.என்ன செய்யப்போகிறாள் என அதிர்ச்சியுடன் பார்த்தோம்.வெளியில் சென்று வாழை இலை அறுத்துக்கொண்டு வந்தாள்.பின்,சிறையில் இருப்பவர்களுக்கு போடுவது போல் ஆப்பையை கொண்டு கேப்பைக்கழியை எங்கள் இருவருக்கும் தலா இரண்டு உருண்டைகள் வைத்தாள்.அதற்கு தொட்டுக்கொள்ள ஏதோ கத்திரிக்காயைக்கொண்ட ஒரு கூட்டை வைத்தாள்.முகம் சுழித்துக்கொண்டே கையிலெடுத்த எனக்கு வாயில் போட்டதும் ஒரு இனம்பிரியாத உணர்வு.அதுவரை அவ்வளவு சுவையான காம்பினேஷனை நான் எங்கும் சாப்பிடத்தில்லை.பாலாவும் என் மனநிலையில்தான் இருந்தான் .மேலும் இரு உருண்டைகள் வாங்கி முழுங்கிவிட்டு கையை கழுவினோம்.நாங்கள் கைகழுவி முடிப்பதற்கும்,அங்கு முனிவர் போன்ற தோற்றமுடைய ஆள் ஒருவர் வருவதற்கும் சரியாய் இருந்தது.

அவன் எங்களை கூர்மையாக ஒரு பார்வை பார்த்தார்.நானும் அவனை கவனித்தேன்.பாலா பயப்பார்வையை வீசிக்கொண்டிருத்தான்.கையில் ஏதோ பனை ஓலைகளை கட்டிவைத்திருந்தார்.பார்த்தவுடனே தெரிந்தது,இவர் புலவர் என்று.இந்த புலவர்கள் அனைவரும் எந்தவேலையும் செய்யாமல்,சும்மாவே ேதாவது எழுதி மன்னர்களை மிரட்டியோ,ஏமாற்றியோ வாழ்ந்துவிடுகிறார்கள்.பாவம்,நாள்முழுக்க உழைத்தவனைவிட,இவர்கள் உடல்நோவாமல் பணம்பார்த்துவிடுகிறார்கள்.

‘யாரப்பா தாங்கள்?’

முதலில் நீங்கள் சொல்லுங்கள்’

பாலா தான் பதிலளித்தான்.காரணம் எனக்கு அவ்வளவாக தமிழ் உச்சரிப்பு வராது.

‘யாம் வாசுகியின் வேந்தன்’

‘நாங்கள் அயலூரைச்சார்ந்தவர்கள்.விதிவசத்தால் இங்கு மாட்டிக்கொண்டோம்’

‘பரவாயில்லை அப்பா! நீர் எப்போது செல்ல பிரயத்தனபடுகிறீர்களோ அதுவரைக்கும் என் இல்லில் தங்கி உண்டு செல்லுங்கள். வாசுகி’

வெளியே அப்பெண் தேவதை வந்தாள்.எதுவும் அவள் பேசாமல் அம்முனிவரின் முகத்தையே பார்த்தாள்.

‘இவர்கள் இருவரும் பெரும் பிரயாணத்திற்குபின் இங்கு வந்துள்ளார்கள்.இவர்கள் திரும்பும் வரை நம் குடிலில்தான் இருப்பார்கள்.அவர்கள் துயில் கொள்ள ஆவனச்செய்’

அவள் தலையாட்டிவிட்டு சென்றாள்.பின் நாங்கள் இருவரும் உள்ளே சென்று சிறிது தூங்கினோம்.ஒரு அமைதியான இயற்கை சூழலில், தென்றல் தழுவ எங்கள் கவலைகள் மறந்து தூங்கினோம்.

‘ஐயா! எழுந்திரியுங்கள்’

அத்தேவ பெண்ணின் குரல் கேட்டு எழுந்தோம்.

மாலை ஆகிவிட்டது.அகலும் பொருத்தியாயிற்று.இவ்வேளையில் உறங்க கூடாது என்பது சம்பிரதானை.’

மெதுவாக வெளியில் சென்றேன்.அம்முனிவர் எங்கிருந்தோ பல காய்கறிகளை கொண்டுவந்தார்.அவரைப்பார்த்ததும் எனக்கு வாசுகியின் முகம் மனதில் தோண்றியது.பாவம்,அப்பெண் இவருக்கு வாழ்க்கைப்பட்டு அவஸ்தையிடன் காட்சியளிக்கிறாள் என்ற எண்ணம் என்னுள் ஓடியது.அவர் என்னை பார்த்ததும் சிறு சிரிப்பை உதிர்த்துவிட்டு வீட்டிற்குள் சென்றார்.இரவு உணவு முடித்தவுடன் வெளியில் நானும் பாலாவும் அமர்ந்திருந்தோம்.மெதுவாக மிச்சம் இருந்த சரக்கை சிறிது சிறிதாக குடித்துக்கொண்டிருந்தேன்.அந்த முனிவர் எங்கள் அருகில் வந்தார்.


‘மெய்யாலுமே நீவிர் அயலூரா?’


‘ஆமாங்க ஐயா’

‘பிதற்றாமல் மெய்கூறும் அப்பனே’

‘ஐயா! நாங்கள் எதிர்காலத்தை சேர்ந்தவர்கள்.நான் ஒரு விஞ்ஞானி. நான் ஒரு இயந்திரத்தை கண்டுபிடித்தேன்.அதன் வழியே இங்கு வந்தடைந்தோம்.அந்த இயந்திரம் செயல்பட எங்களுக்கு இயற்கை எண்ணை தேவை.அது எங்களிடம் இல்லாததால் எங்களால் திரும்பி செல்ல இயலவில்லை.’

நாங்கள் கூறுவதை ஆச்சரியத்துடன் பார்த்த அந்த முனிவர் சத்தியமாக நாங்கள் கூறியதை நம்பியிருக்கமாட்டார்.

‘நன்று.உங்களுக்கு இயற்கை எண்ணை வேண்டுமென்றால் காவிரிக்கரையோரம்தான் செல்லவேண்டும்.அதுவும் இப்போது போனால் கிடைக்காது.இன்னும் 2 சத ஆண்டுகள் முன்னோக்கிச்செல்ல வேண்டும்.அக்காலத்தில் கரிகாலன் என்ற மாமன்னன், கல்லணை எனும் அணையைக்கட்டுவதற்காக, தேவைப்பட கற்களுக்காக சுரங்கம் ஒன்னைத்தோண்டினான்.அச்சுரங்கத்தினூடே நீவிர் தேடிய வளம் உள்ளது.’

எங்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்ததது.இவர் எப்படி இதெல்லாம் கூறுகிறார்.இவர் கூறுவதை நம்பலாமா? உண்மையிலேயே முற்றும் உணர்ந்த முனிவராக இருப்பாரா?

‘ஐயா,ஆனால் எங்களிடம் அங்கு செல்லக்கூட எண்ணெய் இல்லையே!!’

‘கையில் வெண்ணெய் கொண்டு நெய்க்கு அழைவது ஏனோ’
என்றவாறே வீட்டினுள் சென்றார்.

‘மச்சி, ஒரு நிமிஷம் குடிக்கறத நிறுத்துடா’
சொல்லிவிட்டு வேகமாக சரக்கை என்னிடமிருந்து வாங்கினான்.

‘என்ன மச்சி,நீயும் ஒரு பெக் போட்றியா?’

‘மச்சி!! இது சரக்கு இல்லடா! இதான்டா நம்மள காப்பாத்த போகுது’

‘என்னடா சைன்டிஸ்டு சொல்ற?’

‘இதுல 40% ஆல்கஹால் இருக்கு. மிச்சம் 200 மிலி தேறும்.எப்படி பாத்தாலும் 80 மிலி பெட்ரோல் கிடைக்கும்.வண்டியில இருக்கறது வச்சி இன்னும் 50 வருஷம் போகலாம்.இத வச்சி 160 வருஷம் போகலாம்.எப்படி பாத்தாலும் 2 நூற்றாண்ட கடந்துடலாம்.மச்சி, வீ காட் இட் ’

வழக்கம்போல அவன் கூறியது ஒன்றும் புரியவில்லை. ஏதோ எத்தனால்னு சொன்னான். மெத்தனால்னு சொன்னான்.கார்பன் கட்டமைப்புனு வேற சொன்னான். அதுக்கெ கணக்கெல்லாம் போட்டு ஏதேதோ செஞ்சிட்டு இருந்தான்.ஆனால் நாங்கள் அடுத்த டைம் ட்ராவல் நாளை செய்யப்போகிறோம் என்பது மட்டும் புரிந்தது.

சந்தோஷத்தில் அவன் தூங்காமல் சரக்கையே பார்த்துக்கொண்டிருந்தான்.நான் நித்திரையில் மீள ஆரம்பித்தேன்.


அதிகாலைப்பொழுது.என்னை எழுப்பியது வேறு யாருமில்லை, வாசுகி தான்.

நீராடிவிட்டு வாருங்கள் ஐயா.உணவருந்த வேண்டும்’

‘எங்க குளிக்கனும்’

‘கோ செல்லும் பாதையைத்தொடர்ந்தால்,அடையை அடையலாம்’

தூரத்தில், அம்முனி சென்று கொண்டிருந்தார்.நான், பாலாவையும் எழுப்பி வேகமாக அவரை பின் தொட ஆரம்பித்தேன்.அவருடன் பாலா பல கேள்விகை கேட்டுக்கொண்டே வந்தான்.நான் அக்காட்டினையும் இயற்கையையும் ரசித்துக்கொண்டே சென்றேன்.எதிரில் ஒரு பெரிய ஆறு எங்களை தடைமறித்து எங்களை அதனுள் மூழ்க சொன்னது.



‘யப்பா!! எவ்ளோ பெரிய ஆறு?’

‘அடைப்பின்றி ஓடும் ஆறு . அதனால் இதனை அடையாறு என்பர்.கவனமாய் காலை வையும் பிள்ளைகளே’

‘இதுதான் அடையாறா?’

எனக்கு நான் வாழ்ந்த முகப்பேரை காணவேண்டும்போல் இருந்தது.ஆனால் இப்போதைக்கு இங்கிருந்து என் காலத்திற்கு சென்றால் போதும்.நாங்கள் குளிக்க கரை நோக்கி செல்லும்போது ஒரு ஆடு மேய்ப்பவன் ஏதேதோ பாட்டு பாடியவாறு வந்தான்.அவனைப்பார்த்த இந்த முனிவரும் தலை வணங்கி நின்றார்.ஆனால் அவன் எங்களை ஒரு வினாடி பார்த்துவிட்டி இவரை கண்டும் காணாமல் ஆடுகளை மேய்த்துக்கொண்டு சென்றான்.





‘எதுக்குங்க ஐயா ஆடு மேய்க்கறவனுக்கு தலை வணங்குறிங்க’

‘அவர் ஒரு சித்தர் ஐயா. சாகாவரம் பெற்றவர்’

‘அப்புறம் எதுக்கு ஆடு மேய்க்கிறாரு?’

‘இவரின் ஆன்மா வேறு உடல் வேறு.இவர் சிவபெருமான் வாழும் கைலாயத்தைச்சார்ந்தவர்.ஒருமுறை இப்புவியில் திரிந்து கொண்டிருந்த இவர், அங்கு இருக்கும் ஆடுகள் அனைத்தும் கதறும் சத்தத்தை கேட்டு அதிர்ச்சியுற்றார்.அந்த ஆடுகளின் துன்பத்திற்கு காரணம், அந்த ஆடுகளை வழிநடத்திக்கொண்டிருந்த மூலன் என்றொர் ஆட்டு இடையனின் மரணமே!அந்த இடையன் உயிர்போனதால் ஆடுகள் அனைத்தும் செய்வதறியாது துன்பத்தில் மூழ்கிவிட்டன.இதைக்கண்டு வருந்திய அச்சித்தர் தன் அஷ்டமாசித்துகளில் ஒன்றான பிரகாமியம் எனும் சக்தியின்மூலம் அந்த மூலனின் உடலுக்குள் தன் ஆத்மாவை செலுத்தி அவனை உயிர்ப்பித்தார்.பின் அவரின் சொந்த உடலை ஓரிடத்தில் பாதுகாத்துவிட்டு, ஆடுகளை ஓட்டிச்சென்று பட்டியில் அடைத்துவிட்டு மீண்டும் தன் பூதாகாரத்தை தைடி வந்தார்.ஆனால் அவரது உடல் மறைந்துவிட்டது.பின் வேறு வழியின்றி அந்த மூலனின் உடலிலேயே தங்கிவிட்டார்.வருடத்திற்கு ஒரு பாடல் என எழுதுவார்.இதுவரை 2000 பாடல்களைப்பாடியுள்ளார்.மாபெரும் சித்தர் அவர்.’

எனக்குள் சிரிப்புதான் வந்தது.சித்தராவது சக்தியாவது என எண்ணிக்கொண்டே குளிக்க ஆரம்பித்தேன்.ஒருவன் 2000 ஆண்டுகள் வாழ்வதென்பதெல்லாம் சாத்தியமா?எனக்குள் மேலும் சிரிப்புதான் உண்டாகியது.பாலா தான் அவரிடம் ஏதேதோ கேட்டுக்கொண்டிருந்தான்.அடையாறு,தடையில்லாமல் புரண்டு ஓடியது.வேகமாக குளித்துவிட்டு முனிவரின் வீட்டை அடைந்தோம்.வாசுகியின் கைப்பக்குவத்தில் சோறு மற்றும் புதுவகையான காயில் கூட்டு மற்றும் ஒரு வகையான குழம்பு என அசத்தியிருந்தாள்.பின் சிறிது நேரத்திற்கு பின், அம்முனிவர் எங்களிடம் வந்து,

‘இந்த உடையுடன் சென்றால் அந்நாட்டில் யாரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.அதானல்,இவ்வுடைகளை அணிந்து கொள்ளுங்கள்’

அவர் தந்த சில நூல்துணிகளை வாங்கி அணிந்தோம்.பின் வாசுகியிடம் விடைபெற்றுக்கொண்டு எங்கள் டைம் மெஷினை நோக்கி வந்தோம்.எங்களுடன் வந்த அம்முனிவர்,

‘அய்யா! எனக்கு தங்களால் ஒரு உதவி ஆக வேண்டும்.’

‘சொல்லுங்க ஐயா’

‘இது என்னுடைய பா,க்கள். நீங்கள் திரும்பி உங்கள் காலத்தைச்சேரும்போது,இதை உங்கள் உலக மக்களுக்கு அர்ப்பணம் செய்யுங்கள்’

‘சரிங்க ஐயா !!!’
பாலா கூறிக்கொண்டே அவர் கையிலிருந்து பல ஓலைச்சுவடி கட்டுகளை வாங்கி கொண்டான்.எனக்கு அவருக்கு ஏதாவது செய்யவேண்டும் போலிருந்தது.என் பர்ஸில் இருந்த 2500 ரூபாயை அவரிடம் கொடுத்தேன்.ஆனால் அவர் சிரிப்புடன் மறுத்துவிட்டார்.பாவம் ! பிழைக்கத்தெரியாதவர் என்று எனக்குள்ளே கூறிகொண்டேன்.
பாலா சரக்கை டைம் மெஷினின் பெட்ரோல் டேங்கில் ஊற்றிவிட்டு ஏதோ அட்ஜஸ்ட் செய்து கொண்டிருந்தான்.பின் டைம் மெஷனை ஸ்டார்ட் செய்தான்.சிறிது பிரயத்தனத்திற்கு பின் ஸ்டார்ட் ஆகியது.டைமரில் 200 ஆண்டுகள் முன்னோக்கி செட் செய்தான்.நானும் மெஷினில் ஏறிக்கொள்ள அவரைப்பார்த்து சினேகமான ஒரு புன்னகையை செலுத்திவிட்டு வண்டியை கிளப்பினோம்.அவரிடமிருந்தும் சினேகமான புன்னகை வர,

‘வருகிறோம் ஐயா’

‘சென்று வென்று திரும்புங்கள்’


எங்களின் முன் மீண்டும் ஷங்கர் பட கிராபிக்ஸ்.காலங்கள் ஓடும் நேரத்தில் நாங்கள் அவரின் ஓலைச்சுவடியை பிரித்து முதல் பாடலைப்படித்தோம்.

‘அகர முதல எழுத்தெலாம் ஆதி
பகவன் முதற்றே உலகு’





எங்கள் டைம் மெஷன் மீண்டும் நின்றது.டைமரை மீண்டும் பார்த்தேன்.

நாள் = கி.மு 27.03.0210





பயணம் @ டைம்மெஷின் -3ஐப்படிக்க இங்கே அழுத்துங்கள்

பயணம் @ டைம்மெஷின் -4ஐப்படிக்க இங்கே அழுத்துங்கள்

Comments

  1. உங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி அண்ணா!!!

    ReplyDelete
  2. padippavarkalaiyum muthalam nutraandukku ittu senrathu ungal kathi. arumai thodarungal.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

FIGHT CLUB – சினிமா விமர்சனம்

MALENA (18+) – சினிமா விமர்சனம்

THE PURGE – சினிமா விமர்சனம்